எட்டும் பரதம்!
பரத நாட்டியம் நவரசங்களையும் முகத்தில் வெளிப்படுத்தக்கூடிய கலையாகும். இக்கலையை வசதி படைத்தவர்கள் மட்டுமே பயிற்சியும் பெற்று அரங்கேற்றமும் செய்வார்கள்.
பரத நாட்டியம் நவரசங்களையும் முகத்தில் வெளிப்படுத்தக்கூடிய கலையாகும். இக்கலையை வசதி படைத்தவர்கள் மட்டுமே பயிற்சியும் பெற்று அரங்கேற்றமும் செய்வார்கள். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் ஏழைகளும் பரதம் கற்று பட்டம் பெறலாம் என சூரியா சத்யன் என்பவர் ஏழை மாணவிகளுக்கு பரதத்தை கற்றுக்கொடுத்து வருகிறார்.
இது குறித்து சூர்யா சத்யன் கூறும்போது,""2006-ஆம் ஆண்டு நான் "ருத்ராலயா' நாட்டியப்பள்ளி என்ற பெயரில் 20 மாணவிகளுடன் தொடங்கினேன். இன்று என்னிடம் 100 மாணவிகள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள ஏழை மாணவிகளும் பரதம் பயில வேண்டும் என்ற நோக்கத்துடன் மாத கட்டணம் ரூ. 200 மட்டுமே வாங்குகிறேன். இந்த மாணவிகளுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலம் சான்றிதழ் படிப்பு, பட்டப்படிப்பு ஆகியவைகளுக்குத் தயார் செய்து அனுப்பி வைக்கிறேன்.
தேர்வு கட்டணம் செலுத்த இயலாத மாணவிகளுக்கு நானே தேர்வு கட்டணம் செலுத்திவிடுவேன். இந்த ஆண்டு மொத்தம் 45 மாணவிகளை தேர்வுக்கு அனுப்பியுள்ளேன். இதில் 6 பேர் பட்டம் பெறுவதற்கான தேர்வு எழுதச் செல்கிறார்கள். தொடக்கத்தில் பயிற்சி பெறும் மாணவிகள், பாதத்தின் வலிபோக வீட்டிற்கு சென்றதும் காலில் தேங்காய் எண்ணெய்யைத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து அரிசி கழுவிய நீரை சற்று சூடாக்கி ஊற்றச் சொல்வேன்'' என்றும் குறிப்பிடுகிறார்.