மகளிர்மணி

பொருத்தமான பெண் ஆளுமை!

கரோனா பரவுதல் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக   உலக அளவில் "2020 -இன் சிறந்த சிந்தனையாளராக' கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜாவை பிரிட்டன் 

பிஸ்மி பரிணாமன்

கரோனா பரவுதல் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக உலக அளவில் "2020 -இன் சிறந்த சிந்தனையாளராக' கேரள சுகாதார அமைச்சர் கே. கே .ஷைலஜாவை பிரிட்டன் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.

கேரள அரசின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தியிருப்பதுடன், உயிரிழப்புகளும் இதர மாநிலங்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது. இந்த சாதனைக்கு கேரள மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜாவின் அணுகு முறையே காரணம் என்று "பிபிசி', "நியூயார்க் டைம்ஸ்', "தி கார்டியன்' போன்ற சர்வதேச ஊடகங்களும் பல துறை வல்லுநர்களும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வரிசையில், கரோனா வைரஸ் அதிக அளவில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் எல்லா உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஷைலஜா "மிகச் சிறந்த சிந்தனையாளராக', பிரிட்டன் நாட்டில் பிரபலமான "பிராஸ்பெக்ட்' இதழ் தேர்வு செய்துள்ளது. 2020 - ஆண்டிற்கான உலகின் தலை சிறந்த ஐம்பது சிந்தனையாளர்கள், தத்துவஞானிகள், அறிஞர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் ஒன்றையும் "பிராஸ்பெக்ட்' (prospect) இதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் ஷைலஜாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருப்பவர் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன். ஜெசிந்தாவும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகத்தான் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார் .

சிந்தனையாளர்கள் பட்டியலில் தத்துவவியலாளர் கார்னல் வெஸ்ட், வரலாற்றாசிரியர் ஆலிவெட் ஓட்டேல் உள்ளிட்ட 50 பேர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கரோனா சீனாவில் மட்டுமே காட்டுத் தீயாகப் பரவியுள்ளது.. அது மற்ற நாடுகளுக்குப் பரவாது என்று சாதாரணமாகப் பேசப்பட்ட சூழ்நிலையில், கரோனா வைரஸ் கண்டிப்பாக கேரளாவிலும் தவிர்க்க முடியாத பரவலாக மாறும் என்பதை முன்கூட்டியே துல்லியமாக புரிந்து கொண்டதுடன் கரோனாவின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதையும் ஷைலஜா முழுமையாக கணித்திருந்தார்.

உலக சுகாதார நிறுவனம் சொல்வது போன்று வைரஸ் சோதனை.. வைரûஸ கண்டுபிடித்தல்.. நோயாளிகளைத் தனிமைப்படுத்தல்.. என்ற மூன்று கட்ட நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.. சரியான இடத்தில் பொருத்தமான பெண் ஆளுமை.

"2018-இல் நிபா வைரஸ் கேரளத்தில் பரவுதலை சிறந்த முறையில் தடுத்து நிறுத்தியவர். கரோனா சமயத்திலும் சற்றும் சளைக்காமல் விடாமுயற்சியுடன் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்காகச் செயல்பட்டு வருகிறவர். கரோனா வைரஸ் பரவ விமானம் மூலம் வரும் பயணிகள்தான் முதல் காரணமாக அமைவார்கள் என்று கணித்து தொடக்கத்திலேயே கேரளத்தின் விமான நிலையங்களைக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தவர்' என்றும் "பிராஸ்பெக்ட்' இதழ் பாராட்டியுள்ளது.

இந்தப் பட்டியலில் ஷைலஜாவைத் தவிர வேறு எந்த இந்தியரும் இடம் பெறவில்லை. இந்தப் பட்டியலின் தர வரிசையை நிர்ணயம் செய்வதற்கு இருபதாயிரம் பேர்களிடத்தில் கருத்துக் கணிப்பையும் "பிராஸ்பெக்ட்' நடத்தியுள்ளது. சென்ற ஜூன் மாதம் ஐ.நா அவை கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிரடியாகச் செயல்படும் உலக ஆளுமைகள் கலந்து கொண்ட ஆன்லைன் கருத்தரங்கில் ஷைலஜா டீச்சரை பேச அழைத்திருந்தது, இதுவே, உலக அளவில் ஷைலஜா பிரபலமாகக் காரணமாக அமைந்துவிட்டது. ஐம்பது பேர்கள் அடங்கிய "பிராஸ்பெக்ட்' இதழ் பட்டியலில் 26 பேர்கள் பெண்கள். இது குறித்து அவர் கூறியதாவது:

""சீனாவின் வூஹான் பகுதியில் கரோனா பரவுகிறது என்று தெரிந்ததுமே கரோனா வைரஸ்சின் தன்மை குறித்து படித்தேன். ஒன்று வீரியம் கூடிய "ஸார்ஸ்' வைரஸ். இரண்டாவது சற்று வீரியம் குறைந்த "மெர்ஸ்' . இந்த இரண்டு வைரஸ்சுகளும் ஒரே குடும்பம் என்பதால் அவை "கொவைட் -19 ' வைரஸ் என்று அழைக்கப்பட்டன. வூஹான் நகரில் அநேக கேரள மாணவர்கள் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்ததும் சுகாதாரத் துறை செயலாளரை அழைத்தேன். உடனே அதாவது ஜனவரி 24-இல் கரோனா கட்டுப்பாட்டு குழுமம் ஒன்றை உருவாக்கினோம். எல்லா மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் கரோனா எந்த நிமிடத்திலும் கேரளம் வந்தடையலாம். எச்சரிக்கையாகவும், விழிப்பாகவும் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுங்கள் என்று கேட்டுக் கொண்டோம்.

உலக சுகாதார நிறுவனம் கரோனா உலக நாடுகளில் பரவ இருக்கும் கொள்ளை நோய் என்று அறிவிக்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் என்னென்ன எடுக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தீர்மானித்தோம். ஜனவரி 27 முதல் கேரளத்தில் செயல்படும் விமான நிலையங்களில் கரோனா கண்காணிப்பு சோதனைகளில் ஈடுபட்டோம்.

வைரஸ் தாக்குதல் உண்டு. ஆனால், அறிகுறிகள் இல்லை என்று கணித்தவர்களைத் தனிமைப்படுத்தத் தொடங்கினோம். அறிகுறிகள் உள்ளவர்களை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றோம். இந்த நடவடிக்கை இன்றைக்கும் தொடர்கிறது. மருத்துவப் பணியாளர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று சொல்லியிருக்கிறேன். சளைக்காமல் திறமையாகச் செயல்படும் மருத்துவப்பணியாளர்களைப் பாராட்டவும் நான் தவறுவதில்லை'' என்கிறார் அமைச்சர் ஷைலஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT