ஆப்பிரிக்காவில் அசத்தும் பெண்மணி!
150-க்கும் மேற்பட்ட விதவிதமான உணவு வகைகளை செய்து, பல்வேறு நாடுகளில் வசிப்பவர்களிடமும் பாராட்டு பெற்றவர் ஆப்பிரிக்காவில் வசித்து வரும் இலங்கை தமிழ் பெண்ணான பிரமிளா.
150-க்கும் மேற்பட்ட விதவிதமான உணவு வகைகளை செய்து, பல்வேறு நாடுகளில் வசிப்பவர்களிடமும் பாராட்டு பெற்றவர் ஆப்பிரிக்காவில் வசித்து வரும் இலங்கை தமிழ் பெண்ணான பிரமிளா. மேலும், பள்ளி குழந்தைகளுக்கு தமிழில் குட்டிக்கதைகளை சொல்வதிலும் இவர் வல்லவர். இவரை சந்தித்து பேசியதிலிருந்து..
""நான் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண். கொழும்பில் இருந்தபோது, பாடசாலைக் காலங்களில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி,நடனம், சங்கீதம் என்று அனைத்திலும் ஆர்வமாக கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளேன். இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் எனது பால்ய பருவத்தில் நிகழ்ச்சிகள் நிறைய செய்திருக்கிறேன்.
பின்னாளில் உயர்கல்வியை முடித்து விட்டுஆசிரியர் கலாசாலையில் சேர்ந்து டிப்ளமோ பயிற்சி பெற்றேன். இதன் தொடர்ச்சியாக கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான மகளிர் பள்ளிக்கு ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். காலமும் நகர திருமணம் முடிந்தவுடன் ஆப்பிரிக்க நாடொன்றில் 24 ஆண்டுகளாக வசித்து வருகின்றேன்.
Advertisement
சிறுவயதில் வீட்டில் செல்லமாக வளர்ந்ததால், சமையலறை பக்கம் சென்றதே இல்லை. எனது மகள் பிறந்த பிறகே நான் சமைக்க கற்றுக்கொண்டேன். எனது மகள் வளர வளர, எனது சமையல் ஆர்வமும் கற்றலும் அதிகமானது. மகள் பட்டப்படிப்பை முடிக்கவும், நானும் சமையலில் பட்டம் பெற்றேன்.
பிறகு "பிரமிளாஸ் கிச்சன்' என்ற வலைதள பக்கம் ஒன்றை தொடங்கி, அதில் 150-க்கும் மேற்பட்ட வித்தியாசமான சமையல் குறிப்புகளை பதிவு செய்தேன். மேலும், மக்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக நற்சிந்தனையுடைய குட்டி கதைகளை தமிழில் சொல்லி வருகிறேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, பள்ளி, கல்லூரிகளில் கதைகள் சொல்லவும், சமையல் நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும், போட்டியாளராகவும் பலமுறை அழைக்கப்பட்டேன்.
எனது முதல் நேர்காணல் "அழகிய தமிழ் மகள்' என்ற நிகழ்ச்சியில் ஜெர்மனி முகநூல் தொலைக்காட்சியில் இடம் பெற்றது. கனடாவில் இருந்து வெளிவரும் மாத இதழ் ஒன்றில் எனது படங்களும், பேட்டியும் இடம்பிடித்தன. இங்கிலாந்து எஸ்.ஆர்.எஸ். தமிழ் முகநூல் வானொலியில் பிரமிளாஸ் கிச்சன் என்ற தலைப்பில் எனது சமையல் குறிப்புகள் வெளிவருகிறது'' என்றார்.