அறுவை சிகிச்சையின்போது வயலின் வாசித்தவர்!
இங்கிலாந்தின் வைய்ட் தீவை சேர்ந்த பெண் டாக்மர் டர்னர். ஐம்பது வயதான இவர், முன்னாள் அரசு ஊழியர். இவர், வயலின் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு வலிப்பு நோய் ஏற்பட்டது.
இங்கிலாந்தின் வைய்ட் தீவை சேர்ந்த பெண் டாக்மர் டர்னர். ஐம்பது வயதான இவர், முன்னாள் அரசு ஊழியர். இவர், வயலின் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு வலிப்பு நோய் ஏற்பட்டது. அப்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரி சோதனையில் அவரின் மூளையில் சிறிய கட்டி இருப்பது தெரியவந்தது.
இந்த கட்டி இடது கையின் செயல் திறனை முடக்கும் என்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். ஆனால், அறுவை சிகிச்சை செய்தால் வயலின் வாசிக்கும் திறனை இழந்துவிடுவோம் என எண்ணி டாக்மர் டர்னர் அறுவை சிகிச்சையை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனையைச் சேர்ந்த தலைமை மருத்துவர் ஒருவர் டாக்மரின் வயலின் வாசிப்பு திறன் பாதிக்காத வகையில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஒரு திட்டத்தை கூறினார்.
அதன்படி மருத்துவர்கள் டாக்மரின் மண்டையைத் திறந்து அறுவை சிகிச்சை செய்தபோது அவரது கையில் வயலினை கொடுத்து, வாசிக்க வைத்தனர்.
அப்படி அவர் வயலின் வாசிக்கும்போது மூளையில் செயலில் இருந்த பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டிகளை நேர்த்தியாக அகற்றினர். இந்த அறுவை சிகிச்சை திட்டமிட்டபடியே வெற்றிகரமாக முடிந்ததாகவும், டாக்மரின் வயலின் வாசிப்பு திறனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் மருத்துவர்கள் கூறினர்.