ஏக்தா கபூர், தேசிய பவர் வலு எடை தூங்குவதில் தேசிய சாம்பியன். உத்தரகண்ட் டேராடூனைச் சேர்ந்தவர். உடல் கட்டமைப்பில் சர்வதேச சான்றிதழ் பெற்றவர். சொந்தமாக நவீன உடல் கட்டமைப்பு கூடம் ஒன்றை டேராடூனில் நடத்தி வருபவர். ஆனால் அவரது வாழ்க்கையின் துவக்கம் ஏக்தாவை பல கோணங்களில் துன்புறுத்தியது. சுமைகளை சாதனைகளாக எப்படி ஏக்தா மாற்றினார் ?
""விரக்தியில் மூன்று முறை தற்கொலை முயற்சிகளைச் செய்திருக்கிறேன். மன அழுத்தத்தில் மன உளைச்சலில் உழன்று இருக்கிறேன். எனக்கு 32 வயதாகிறது. அப்பா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர். நான் பெண்ணாகப் பிறந்ததால் பிடிக்காமல் எங்களைவிட்டு அம்மா பிரிந்து போய்விட்டார்.
"ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம்.. உன்னால் தனியாக குழந்தையை வளர்க்க முடியாது' என்று உறவினர்கள் அப்பாவிடம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அப்பா ஒத்துக் கொள்ளவில்லை. பாசத்தைக் கொட்டி என்னை வளர்த்தார். அத்தையும் என்னை வாஞ்சையுடன் கவனித்துக் கொண்டார்.
பள்ளியில் விளையாட்டில் ஆர்வமாக இருப்பேன். திருமணமானால் வாழ்க்கை ஒருவிதத்தில் பூரணமாகிவிடும் என்று எனது திருமணம் பற்றி யோசித்தார்கள். எனக்கு 18 வயதில் திருமணமானது. புகுந்த வீடு சென்ற பிறகுதான், கணவர் சட்ட விரோதமான தொழில்களில் ஈடுபடுகிறார் என்று தெரியவந்தது. நான் அப்பாவிடம் திரும்ப வந்து விட்டேன். விவாகரத்து வாங்கலாம் என்று நினைத்தேன். பலரும், "வாழ்க்கை அப்படி இப்படித்தான் இருக்கும். போகப் போக சரியாகிவிடும்' என்று புத்திமதி சொல்ல, மீண்டும் கணவரிடம் வந்தேன்.
எனக்கு குடும்ப உறவு என்ன என்று தெரியாத நிலையில் கணவர் வலுக்கட்டாயமாக என்னிடம் "கணவராக' நடந்து கொண்டார். அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி மீண்டும் அப்பாவிடம் வந்தேன். தற்கொலை செய்து கொள்ள முயன்று காப்பாற்றப்பட்டேன். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிய வந்தது. சீக்கிரமே கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றேன். பெண் குழந்தைக்குத் தாயானேன்.
எத்தனை காலம் அப்பாவுக்குப் பாரமாக இருப்பது என்று தில்லி வந்து, உறவினர்கள் வீட்டில் தங்கி வேலைக்காகப் படிக்கத் தொடங்கினேன். வேலையும் தேடினேன்... இதற்கிடையில், நடிக்கவும் பயிற்சி பெற்றேன். மாடலிங் ஆக முயன்றேன். ஆனால் அன்றைய மனநிலையில் எதையும் என்னால் சரிவரச் செய்ய முடியவில்லை. கனடாவில் வசிக்கும் சகோதரன் அழைத்தும், நான் போகவில்லை. என்னைக் கவனித்துக் கொண்டது போலவே, எனது மகளையும் அப்பா பார்த்துக் கொண்டார்.
மகளை விடுதியில் சேர்க்கச் சொன்னார்கள். "தத்து கொடுத்துவிடு உனக்குப் பாரம் குறையும்' என்றார்கள். எனக்கு வந்தது போல வாழ்க்கையில் அவளுக்கு வர வேண்டியதும் வரட்டும் என்று என்னுடனே வைத்துக் கொண்டேன். அப்பாதான் என் மகளுக்குத் தாயாக தாத்தாவாக இருந்து கை கொடுத்தார். மறுமணம் செய்து கொள் என்று அப்பா பலமுறை வலியுறுத்தினார். இப்போது வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.
"நீதான் விளையாட்டில் ஈடுபாடு உள்ளவள் ஆச்சே. உடலை சீராக வைத்துக் கொள்ள பயிற்சி பெற்றால், பிறகு அதையே தொழிலாக வைத்துக் கொள்ளலாமே..' என்று பலரும் சொல்ல, மும்பை வந்தேன். "ஃபிட்னெஸ்' வகுப்புகளில் சேர்ந்து சர்வதேச சான்றிதழ்களை பெற்றேன். குத்துச் சண்டை, எடை தூக்குவதிலும் சான்றிதழ்கள் பெற்றேன். அப்போதுதான் பவர் லிஃப்டிங்கில் தேசிய சாம்பியன் ஆனேன்.
இந்த சூழ்நிலையில் சஷாங்க் என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. அவரும் உடல் கட்டமைப்பு பற்றி படிக்க வந்தவர். உத்தரகண்டைச் சேர்ந்தவர். இருவரது கருத்து, லட்சியம் ஒத்துப் போனதால் அவரை கணவராக ஏற்றுக் கொண்டேன். 12 வயதாகும் மகளையும் தனது குழந்தை போல பார்த்துக் கொள்கிறார். நாங்கள் இருவரும் இணைந்து டேராடூனில் உடல் கட்டமைப்பு பயிற்சி நிலையத்தைத் தொடங்கி நடத்தி வருகிறோம்.
என்னைப் போல வாழ்க்கையில் பல சோதனைகளை சவால்களாக சந்திக்கும் பெண்கள் இருக்கிறார்கள். சோதனைகளைக் கண்டு துவண்டு விடாமல் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட வேண்டும். சந்தோஷமாக வாழ வழிகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். என்பதை வலியுறுத்தவே என் கதையைச் சொல்கிறேன்'' என்கிறார் ஏக்தா கபூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.