முகப்பு
மகளிர்மணி

மொழி ஒருபோதும் தடை அல்ல!

சென்னையிலுள்ள ஒரு பள்ளியின் நிர்வாகி மற்றும் தலைமையாசிரியர், எழுத்தாளர், சிறந்த பெண் கவிஞர் என்ற விருதும் பெற்றவர். வை.அமுதா பொற்கொடி.

Updated On : 17 நவம்பர், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:04 AM

சென்னையிலுள்ள ஒரு பள்ளியின் நிர்வாகி மற்றும் தலைமையாசிரியர், எழுத்தாளர், சிறந்த பெண் கவிஞர் என்ற விருதும் பெற்றவர். வை.அமுதா பொற்கொடி.

பள்ளி நிர்வாகம் என்பது எமது குடும்பத்திற்கு புதியதல்ல, பக்தியுடன் கல்வியும் அவசியம் என்று உணர்ந்த என் மூதாதையர்கள் மூன்று தலைமுறைக்கு முன்பே ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தையும் நிறுவினர். அதன் தொடர்ச்சியாக பெரியப்பா ஆலடி அருணா மற்றும் அவருடைய பிள்ளைகளும் பல கல்வி நிறுவனங்களை சிறப்பாக நடத்தி வருகின்றனர். முந்தைய தலைமுறையில், என் பெற்றோரின் பெரும்பாலான உறவுகள் ஆசிரியர்களே. கல்விப்பணி என்பது உதிரத்திலே ஊறியிருப்பதால், என் தந்தை வை.வைகுண்டம் வடசென்னை கிழக்குக் கல்லறைச் சாலை குடிசைமாற்று வாரியப் பகுதியில் அமைந்துள்ள திரிஜெகன் மோகன் நடுநிலப்பள்ளியை பொறுப்பேற்று சிறப்பாக நடத்தினார். நானும் ஆசிரியர் என்பதால், அவர் வழியில் பள்ளியைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். 1990-ஆம் ஆண்டில் இந்தப் பள்ளியில் அடியெடுத்து வைத்தேன். அன்று முதல் இன்று வரைஎனது செயல் அனைத்தும் அதனைச்சுற்றியே சுழன்றுக் கொண்டிருக்கிறது.

மாணவர்களில் தன்னம்பிக்கையோடு வாழ்பவர்கள் உண்டா ?

Advertisement

எனது முப்பத்திரண்டு ஆண்டு அனுபவத்தில், நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்விப் புகட்டியுள்ளேன்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நடக்க இயலாத மாற்றுத்திறனாளியான என் மாணவி ஷாகின் பானு என் அன்புப் பராமரிப்பில் எட்டாம் வகுப்புவரை படித்து பின்னர் என் தூண்டுதலின் பேரில் பட்டதாரியாகி இன்று தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

எனது பல மாணவர்கள் வளைகுடா நாடுகளில் பணியாற்றுகின்றனர். குடும்ப சூழல் காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்தி கூலி வேலைக்குச் சென்ற செல்வ கணேஷ் என்ற மாணவனை மீட்டு, மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தேன். அவன் தொழிற் கல்விக் கற்று, இன்று ஒரு தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரிகிறான்.

தந்தை சிறை சென்று விட்டதால், தாயும் கைவிட்ட நிலையில் அநாதையாக வீதியில் அலைந்து கொண்டிருந்த கோகுல் மற்றும் அவனது இரு சகோதரிகளை ஆதரித்து கல்வி புகட்டியதின் விளைவு. இன்று அவர்கள் படித்து தனது வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு சிறப்பாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி எம்பள்ளி மூலம் இலவசமாக கல்விக்கற்று இன்று தன்னம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

சமூக வலைத்தளம் வரமா-சாபமா?

என்னைப் பொறுத்தமட்டில் விஞ்ஞான முன்னேற்றத்தால் ஏற்படும் அத்தனை மாற்றங்களும் வரவேற்கத்தக்கதே, அதன் பயன்பாடு கையாளுபவரின் சிந்தனைக்கும் செயல்பாடுகளுக்கும் ஏற்றவாறே அது வரமாகவோ, சாபமாகவோ அமையும். குடும்பம், ஆசிரியர் பணி என்ற வட்டத்திற்குள் மட்டுமே சுழன்று கொண்டிருந்த என்னை பலரும் அறியும் படியான கவிதாயினி அமுதா பொற்கொடியாக உயர்த்தியது சமூக வலைத்தளமே. பிரபலங்களின் பாராட்டையும் பெற்று தந்தது.

கல்வியால் அடையும் மகிழ்ச்சி ?

பள்ளிக் கல்வி கட்டணம் செலுத்த இயலாத குடிசை வாழ் மக்களும், ஆதரவற்றக் குழந்தைகளுமே எம்போன்ற இலவச தமிழ்வழிக் கல்வியை நாடி வருகின்றனர். இருந்தாலும் ஆங்கில வழிக்கல்விக்கு நிகரான அறிவாற்றலும் திறமையும் நம் தமிழ் வழிக்கல்வி மூலமும் பெற முடியும். வெற்றிக்கும், திறமைக்கும் மொழி ஒரு தடையே அல்ல தாய் மொழி வழிக்கற்றலே நம் புரிதலுடன் கூடிய செயல் திறனை வளர்க்கும் என்பதை என் கற்பித்தல் அனுபவம் மூலம் முழுமையாக உணர்கிறேன். அதை பெற்றோர்கள் மனதிலும் விதைக்கிறேன். அதன் மூலம் தமிழ் வழிக்கல்விக்கு ஊக்கமும், உயிரூட்டமும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.