கதம்பம்: தொல்லுயிரியலிலும் சாதிக்கலாம்!
இளம் தொல்லுயிரியல் ஆய்வாளர் என்ற வகையில் ஆளுநரிடமிருந்து சிறப்பு விருதும், டாக்டர் அப்துல்கலாம் மாணவர் விருதும் பெற்றவர் சென்னையைச் சேர்ந்த அஸ்வதா பிஜு.
இளம் தொல்லுயிரியல் ஆய்வாளர் என்ற வகையில் ஆளுநரிடமிருந்து சிறப்பு விருதும், டாக்டர் அப்துல்கலாம் மாணவர் விருதும் பெற்றவர் சென்னையைச் சேர்ந்த அஸ்வதா பிஜு. இந்தியன் புக் ஆஃப் அவார்ட்ஸ், 2020-ஆம் ஆண்டுக்கான குளோபல் சைல்டு பிராடிஜி ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
தொல்லுயிரியல் என்பது பாறைகளில் பதிவாகியுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளின் புதைபடிமங்களை அடிப்படையாகக் கொண்டு, அவற்றை பற்றி ஆராயும் துறையாகும். உயிர் வாழினங்களின் உடற்படிமங்கள், வழித்தடங்கள், வளைகள், கழிவுப்படிவங்கள் மற்றும் ரசாயன எச்சங்கள் ஆகியவற்றின் ஆய்வுகளையும் உள்ளடக்கிய பிரிவு இது.
கூர்ந்த ஆய்வு மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமே ஈடுபடும் புதைபடிமங்கள்( பாலியன்டாலஜி) பற்றிய ஆராய்ச்சி செய்து வருகிறார். 14 வயது அஸ்வதா பிஜு பள்ளிப் பாடங்களை படிக்கும் வயதில், பள்ளிகள், கல்லூரிகள், ஆய்வு மையங்கள் என்று இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சென்று தொல்லுயிரியல் குறித்து உரையாற்றி வருகிறார். தான் சேகரித்த 132 தொல்லுயிரி படிமங்களை கொண்டு வீட்டிலேயே சிறிய அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார்.
""இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்து புதை படிமங்களை பற்றி ஆய்வுகளை நடத்தி அவற்றை சேகரித்து வருகிறேன். இதுவரை 132 -க்கும் மேற்பட்ட படிமங்களை சேகரித்து சிறிய அருங்காட்சியகத்தை வீட்டில் அமைத்துள்ளேன்.
ஆரம்பத்தில் புதைபடிமங்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களை மட்டுமே தெரிந்து கொண்டேன். தற்போது புதைபடிம உயிரினம் எப்படி நகர்கிறது. எவ்வகை உணவை சாப்பிடுகிறது.
எந்தெந்த இடங்களில் புதைபடிமங்கள் கிடைக்கும்? அந்த உயிரினங்கள் மூலம் பண்டைய கால வெப்பநிலை, புதைபடிவ ஆய்வியல், உருவ இயல் உள்ளிட்ட பல விவரங்களை எப்படி அறிந்து கொள்வது போன்ற தகவல்களை படித்து தெரிந்து கொண்டு வருகிறேன்'' என்கிறார்.