முகப்பு
மகளிர்மணி

பாத எரிச்சல்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பாதங்களில் உள்ள நரம்புகளில் சேதம் ஏற்படுவதால், கால்களில் பாத எரிச்சல் வரும். சில சமயம் தாங்கமுடியாத வலியைபோல,  காலில் நெருப்பை வைத்ததுபோல் இருக்கும்.

Updated On : 6 நவம்பர், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:15 PM

பாதங்களில் உள்ள நரம்புகளில் சேதம் ஏற்படுவதால், கால்களில் பாத எரிச்சல் வரும். சில சமயம் தாங்கமுடியாத வலியைபோல,  காலில் நெருப்பை வைத்ததுபோல் இருக்கும்.  கால் விரல்களில் கூச்ச உணர்வு ஏற்படுவதே இதன் முதல் அறிகுறி.  பின்னர்,  அந்த பகுதிகளில் உணர்ச்சி குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக அவை பாத எரிச்சலாக மாறும்.

உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானால், பாத எரிச்சல் ஏற்படும். அதனால் பாத எரிச்சல் என்றவுடன் சர்க்கரை நோய் என எண்ண வேண்டாம். ரசாயனங்களால் ஏற்படும் அலர்ஜி, சிறுநீரகச் செயலிழப்பு, புற்றுநோய்காக கீமோதெரபி எடுப்பதாலும்,  முடக்குவாதம் போன்ற பல காரணங்களாலும் பாதத்தில் எரிச்சல் வரலாம்.

ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்பட்டாலும் பாத எரிச்சல் உண்டாகும்.

Advertisement

வைட்டமின் குறைபாடு இருப்பவர்களுக்கும்,   பி 12 குறைபாடு,  ஃபோலேட் குறைபாடு இருப்பவர்களுக்கு இப்பிரச்னை வரும்.

ஆர்த்ரரைட்டிஸ் பிரச்னைகளால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாவதாலும், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு, கால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பாத எரிச்சல் உண்டாகும்.

ஹைப்போ தைராய்டிசம்' இருப்பவர்களுக்கு, பாத எரிச்சல் அதிகமாக இருக்கலாம். தைராய்டு அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் இதைத் தவிர்க்கலாம்.


தீர்வுகள்:

மருதாணியில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்து அதை பாதத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து பாதத்தை சுத்தம் செய்து வந்தால் பாத எரிச்சல் குறையும்.

மஞ்சளில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியைக் குறைக்க உதவும். 2 மேசைக் கரண்டி ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, எரிச்சல் உணர்வு உள்ள பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கற்றாழையில் உள்ள சதை பகுதியை பாதத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் எரிச்சல் தணியும்.

உறங்கும் முன் வெந்நீரில் சிறுது உப்பு கலந்து அதில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டும். பின் சுத்தமான தேங்காய் எண்ணெயை காலில் தடவினால் எரிச்சல் போகும்.

வைட்டமின் பி3 நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், நரம்புகள் பலம்பெறும். ஆகவே முழு தானியங்கள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, வேர்க்கடலை, பால், தயிர், மற்றும் முட்டை மஞ்சள் கரு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாதத்தில் எரிச்சல் ஏற்படுவதில், நரம்பு சார்ந்த பிரச்னைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதனால் தாங்க முடியாத பாத எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.