முகப்பு
சிறுவர்மணி

அறிவோம்... மாம்பழம்

ஆண்டு முழுவதும் பச்சைப் பசேலென்று இருப்பது மாமரம்.கோடையின் உச்சத்தில் மாம்பழ சீசன் ஆரம்பிக்கும்.  கோடை வெய்யிலின் உக்கிரம் அதிகரிக்க, அதிகரிக்க மாம்பழத்தின் இனிப்பும் அதிகரிக்கும்! நமது கண்ணையும் கருத

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:07 PM
பகிர்:

ஆண்டு முழுவதும் பச்சைப் பசேலென்று இருப்பது மாமரம்.கோடையின் உச்சத்தில் மாம்பழ சீசன் ஆரம்பிக்கும்.  கோடை வெய்யிலின் உக்கிரம் அதிகரிக்க, அதிகரிக்க மாம்பழத்தின் இனிப்பும் அதிகரிக்கும்!

நமது கண்ணையும் கருத்தையும் நாவையும் கவரும் மாம்பழத்தில், உலகில் 1000 வகைகள் உள்ளன.

பந்துபோல உருண்டையாகவும், சற்றே நீள் உருண்டையாகவும், முன்பாகம் கிளியின் மூக்கு போல வளைந்த நிலையிலும் பல்வேறு வடிவங்களில் மாம்பழங்கள் விளைகின்றன.

சில வகை மாம்பழங்கள் மாலை வானத்தைப் போல மஞ்சளும் சிவப்பும் கலந்த ஆரஞ்சு வண்ணத்தில் கண்ணைக் கவரும்.  சுத்தமான மஞ்சள் மற்றும் இலைப் பச்சை நிறங்களில் கிரிக்கெட் பந்து அளவிலிருந்து தர்பூசணி அளவு பெரிய சைஸ் வரையிலும் வகைவகையாக மாம்பழங்கள் உள்ளன.

இந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம்.

இந்தியாவின் மிகப்பெரும் சாதனை என்று யாராவது கேட்டால், தயங்காமல் "உலகிற்கு மாம்பழத்தை அறிமுகப்படுத்தியதுதான்' என்று சொல்லலாம்.  அஸ்ஸôம் காடுகளிலும் பர்மா (மியான்மர்) நாட்டின் அடர்ந்த காடுகளிலும்தான் முதன் முதலில் மாம்பழங்கள் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான்.

ஆங்கிலத்தில் "மாங்கோ' என்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்! இந்தப் பெயரைத் தந்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.

500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள், இந்திய மாம்பழங்களைச் சுவைத்து அதிசயித்துப் போனார்கள்.  பைத்தியம் பிடிக்காத குறைதான்.  அதனால்தான் விதவிதமான மாம்பழங்களை உருவாக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.  அல்போன்சா மற்றும் மல்கோவா என்று நாம் இப்போது சப்புக்கொட்டிச் சாப்பிடுபவை எல்லாம் போர்ச்சுக்கீசியர்களின் கடும் உழைப்பினால் வந்தவை.  உலகிற்கு மாம்பழங்களை (ஏற்றுமதி செய்து) அறிமுகப்படுத்தியவர்களும் அவர்களே!

இந்தியர்கள் மாம்பழங்களை 3000 ஆண்டுகளாகச் சுவைத்து மகிழ்ந்து வந்திருக்கிறார்கள்.  ஆனால் ஐரோப்பியர்களுக்கு இதன் சுவை கடந்த 300 ஆண்டுகளாகத்தான் தெரியும் என்பது அதிசய செய்தி!

சரி.. இந்தியர்களுக்கு 3000 ஆண்டுகளாகவே மாம்பழச் சுவை தெரியும் என்பதற்கு என்ன ஆதாரம்?

பிரஹதாரண்யகா உபநிடதத்தில் மாம்பழத்தின் குணங்கள் மற்றும் அதனுடைய பல்வேறு பெயர்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன.  ஆம்ரா, சுதா, ரஸலா மற்றும் சஹ்காரா என்ற பெயர்களும் மாம்பழத்திற்கு உண்டு என்று உபநிடதம் மூலம் தெரிய வருகிறது.  அதன் சுவை பற்றியும் ரசித்து ரசித்துக் கவிதையாய்ப் பொழிந்திருக்கிறார்கள்!

வைட்டமின் ஏ,சி மற்றும் டி அதிகமாக உள்ள மாம்பழத்துக்கு வேறு பல குணங்களும் இருப்பதாக நம்மவர்கள் நம்புகின்றனர்.

மாம்பழம் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று பெரும்பாலோர் நினைக்கின்றனர்.  மாவிலைத் தோரணங்களை வீட்டு வாசல்களில் தொங்கவிடுவதன் மூலம் அதிர்ஷ்ட தேவதையை இல்லங்களுக்கு வரவழைத்து ஆசைக் கனவுகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.

மண்மாதாவின் அன்புக் கொடை என்றும் மாம்பழத்தை வர்ணிக்கின்றனர்.  கௌதம புத்தர் வெள்ளை நிற மாமரம் ஒன்றை உருவாக்கினார் என்றும் பிற்காலத்தில் அவருடைய வழிவந்தவர்கள் அம்மரத்தை வழிபட்டனர் என்றும் கதைகள் உள்ளன.

எல்லோருடைய மனங்களிலும் இல்லங்களிலும் நிறைவான இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் மாம்பழம் உண்மையிலேயே "பழங்களின் அரசன்'தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.