கண் தானம்!
விழிகள் இரண்டும் பழுதானால் வெளிச்சமும் இருட்டும் ஒன்றாகும்
விழிகள் இரண்டும் பழுதானால்
வெளிச்சமும் இருட்டும் ஒன்றாகும்
பழுதுகள் இன்றி விழிகளைநாம்
பாது காப்பது நன்றாகும்!
கண்களை இழந்து தவிப்போர்க்கு
கண்களைத் தானம் செய்திடுவோம்
கண்ணீர் துடைக்கக் கைகொடுப்போம்
கண்ணொளி பெற்றிட கண்கொடுப்போம்!
இருண்ட விழிகளில் ஒளியேற்ற
எழுச்சி யுடனே வாருங்கள்
பெருமை யோடு கண்ணிரண்டைப்
பார்த்திட நீங்கள் தாருங்கள்!
இறந்த பின்பும் நம்கண்கள்
இந்த உலகைப் பார்க்கட்டும்
திறந்த விழிகள் நன்றியுடன்
தினம்தினம் நம்மை வாழ்த்தட்டும்!
மண்ணில் விழியின் மரணங்கள்
மனித மனத்தின் துயரங்கள்
கண்களைத் தானம் செய்வோரின்
கருணை மனங்களோ வைரங்கள்!
கண்களைக் கொடுத்தார் கண்ணப்பர்
கனிவோடு சிவனுக்கு அந்நாளில்
வண்ணமும் வடிவமும் கண்டுணர
வழங்குவோம் கண்களை இந்நாளில்!