கதைப்பாடல்: விலங்குகளின் மறியல் போராட்டம்!
ஆனை மலையில் ஒரு காடுஅடர்ந்து இருக்கும் செடிகொடிகள்!
ஆனை மலையில் ஒரு காடு
அடர்ந்து இருக்கும் செடிகொடிகள்!
வானை முட்டப் போவது போல்
வளர்ந்து நிற்கும் பலமரங்கள்!
பசிக்கும் போது உண்பதற்கு
பலவித மான உணவுகளாம்!
திசைக்கு ஒன்றாய்க் குட்டைகளும்
தெளிந்த நீரைக் கொண்டனவாம்!
உண்ண உணவும் குடிப்பதற்கு
உகந்த நீரும் கிடைத்ததனால்
நெஞ்சம் மகிழ்ந்தே விலங்குகளும்
நிறைவாய் வாழ்ந்து வந்தனவாம்!
அந்த ஆண்டு கடும் கோடை!
ஆண்டு முழுவதும் மழை இல்லை!
தண்ணீர் வற்றிக் குட்டையிலே
தரையும் வெடித்துப் போனதுவாம்!
நீரை இன்றி விலங்குகளும்
நித்தம் கண்ணீர் வடித்தனவாம்!
"போறேன்' என்றே சிலமயங்கி
"பொத்'தென விழுந்தே இறந்தனவாம்!
ஒருநாள் கூடி விலங்குகளும்
உறுதி எடுத்துக் கொண்டனவாம்!
மறுநாள் காலை சாலையிலே
மறியல் செய்தே அமர்ந்தனவாம்!
அந்த வழியில் வாகனங்கள்
அனைத்தும் முடங்கி நின்றனவாம்!
இந்தச் செய்தி பரவியதாம்!
ஏகமாய் மக்கள் குவிந்தனராம்!
அலுவலர் பலரும் அறிந்ததுமே
அங்கே விரைந்து வந்தனராம்!
புலியும் அவர்களை அழைத்துப்போய்
பொட்டல் குட்டையைக் காட்டியதாம்!
சொட்டு நீரும் இல்லாமல்
சுருண்டு விழுந்தே மான்குட்டி
செத்துப் போனதை கலைமானும்
சொல்லிக் கண்ணீர் விட்டதுவாம்!
குட்டி யானை நீருக்காய்
கிணற்றில் விழுந்து இறந்ததனை
சுட்டிக்காட்டி யானையுமே
தேம்பித் தேம்பி அழுததுவாம்!
அவல நிலையைப் பார்த்தவர்கள்
அனைவரும் நெஞ்சு உருகினராம்!
அவசரச் செய்தி பறந்ததுவாம்!
ஆணை உடனே கிடைத்ததுவாம்!
அருகில் இருந்த குட்டையினை
அடைந்ததாம் தண்ணீர் வண்டிகளும்!
குரங்கார் திருகைத் திறந்ததுமே
குட்டையில் தண்ணீர் பாய்ந்ததுவாம்!
கண்னீர் விட்ட விலங்குகளின்
கவலை நீங்கிப் போனதுவாம்!
தண்ணீர் குடித்தே கைகூப்பி
தங்களின் நன்றியைக் கூறினவாம்!