கதைப்பாடல்: அழகிய ஜாடிகள்!
பிரான்சு நாட்டில் ஓர் அரசன் பெரிய தனது அரண்மனையில்
பிரான்சு நாட்டில் ஓர் அரசன்
பெரிய தனது அரண்மனையில்
அரிதாய்க் கிடைத்த ஜாடிகளை
அழகாய்ப் பார்வைக்கு வைத்திருந்தான்!
நாடுகள் பலவும் அவன் சென்று
நாட்கள் பலவும் செலவிட்டு
தேடிக் கொணர்ந்தவை அவையெல்லாம்!
தினமும் பார்த்து மகிழ்ந்து வந்தான்!
விருந்தினர் வந்தால் அனுமதிப்பான்
"வேலைப் பாடுகள், கலை வண்ணம்
எல்லாம் நிறைந்தவை இவையெல்லாம்
எப்படி இவற்றைச் சேர்த்தீர்கள்?' - எனப்
புகழ்மொழி பலவும் சொன்னார்கள்
புன்னகை பூத்தான் பேரரசன்!
"கண்ணாய் இவற்றைக் காக்கின்றேன்
காவல் மிகவும் உண்டெ'ன்றான்!
தினந்தினம் அவற்றை அக்கறையாய்
துடைக்கும் ஊழியர் கை தவற
உடைந்தது துண்டாய் ஒரு ஜாடி!
அடைந்தான் கோபம் மன்னவனும்!
"ஓவியமாகக் காக்கின்றேன்
உடைத்து விட்டாயே ஒரு நொடியில்!
உன்னைச் சிறையில் போடுகிறேன் - நாளை
உன் உயிர் தூக்குக் கயிற்றினிலே!'
இந்தச் செய்தி அறிந்தவர்கள்
இதயம் துடிக்க அழுதார்கள்!
அந்தப் பெருநகர் எல்லையிலே
அதனை அறிந்தார் ஒரு பெரியார்!
கையில் ஒரு கோல் துணையுடனே
காவலன் அரண்மனை அவர் வந்தார்!
"மன்னா! உடைந்த ஜாடியினை - நீ
மகிழும் வண்ணம் ஒட்டிடுவேன்!
உடைந்த சுவடே தெரியாது
உடனே அனுமதி தா' என்றார்!
அனுமதி தந்தான் மன்னவனும்
அவரும் ஜாடிகள் உள்ள இடம்
சென்றார் பார்த்தார் ஒருநொடியில் - அவற்றை
சிந்தை துணிந்து தள்ளி விட்டார்!
எல்லாம் உடைந்தன ஓடுகளாய்
எடுத்தான் வாளை மன்னவனும்!
அரசன் கேட்டான் சினத்தோடு,
"அழகாய் இருந்த ஜாடிகளை
துண்டாய் உடைத்தாய், நோக்கமென்ன? - நீ
தூக்குக் கயிறு பார்த்ததுண்டா?'
"இத்தனை ஜாடிகள் இங்கிருந்தால் - இனி
எத்தனை உயிர்கள் பறிபோகும்?
அத்தனை ஜாடியும் உடைத்துவிட்டேன்
அதனால் தூக்கு எனக்குத்தான்!
என்னுயிர் போனால் போகட்டும் - பிறர்
இன்னுயிர் இனிமேல் போகாதே!
உயிரை விடவா ஒரு பொருள் பெரிது - மக்கள்
உயிரைக் காக்கும் மன்னா சொல்!'
உணர்ந்தான் மன்னன் பேருண்மை!
உகுத்தான் கண்ணீர், சொன்னான் ஒரு சொல்!
"என்னைத் திருத்திய பெரியவரே - எனக்கு
என்றும் நல்லுரை சொல்லிடுவீர்!
உயிர்களைக் காக்கும் பணியினிலே
உறுதுணையாக நின்றிடுவீர்!
உயர்ந்த கருத்தைச் சொல்லுங்கள்
உங்கள் வழியில் நான் நிற்பேன்!'
பாடலின் மூலம் பிளான்ஷே (பிரான்ஸ்)
எழுதிய குட்டிக்கதை
தமிழில்: பிரெஞ்சுக் கதைகள் - சச்சுதானந்தம்