கதைப்பாடல்: கரடியும் குரங்கும்!
குறும்பன் என்னும் குரங்குமேகொல்லி மலையில் வாழ்ந்ததாம்!
குறும்பன் என்னும் குரங்குமே
கொல்லி மலையில் வாழ்ந்ததாம்!
கருப்பன் என்றே அழைத்திடும்
கரடி அதற்குத் தோழனாம்!
பள்ளத்தாக்கில் இரண்டுமே
பாங்காய் இருந்த இடத்திலே
உள்ள நிலத்தைப் பிரித்துமே
உழவு செய்ய நினைத்தன!
கலப்பை கொண்டே உழுதன
களையைப் பிடுங்கி எறிந்தன!
மலை நெல் அதிலே விளைத்தன
மலை நீர் பாய்ச்சி வளர்த்தன!
நெல்லும் நன்றாய் விளைந்துமே
நீண்ட கதிர்கள் தொங்கின!
உள்ளம் மகிழ்ந்தே இரண்டுமே
ஓர்நாள் அறுவடை செய்தன!
கதிரை அடித்த குரங்குமே
களத்தில் நெல்லைக் குவித்ததாம்!
அதனைப் போல கரடியும்
அடித்தே நெல்லைக் குவித்ததாம்!
""கருக்காய், தூசி போக்கவே
காற்றும் இல்லை தூற்றவே...
வருவோம் வீடு சென்றுமே
வா''எனக் கரடி அழைத்ததாம்!
""கருப்பா! சற்றே பொறுத்திரு..,
காற்று வரலாம் விரைவிலே!
அறுத்தோம், அடித்தோம், தூற்றியும்
அள்ளிப் போவதே நல்லது''
என்று சொன்னது குரங்குமே.
""எனக்குக் களைப்பாய் இருக்குது..
என்னால் இருக்க முடியாது...
இருந்த வா, நான் போகிறேன்''
கருப்பன் சொல்லிப் போனதும்
காற்றும் வீச லாச்சுது!
குறும்பன் நெல்லைத் தூற்றியே
கொண்டு போனது வீட்டுக்கு!
வீடு சென்று தூங்கியே
விழித்து வந்த கருப்பனும்
ஓடும் காற்று போனதால்
உருகி கண்ணீர் வடித்தது!
""காற்று உள்ள போதிலே
கருத்தாய் தூற்றிக் கொள்ளணும்
காற்றை விட்டால் மீண்டுமே
காத்திருக்கணும் வரும்வரை
அலுப்பு கொண்டால் இப்படி
ஆகும் என்றேன் முன்னமே
கலங்க வேண்டாம் இனியேனும்
கருத்தில் கொண்டே நடந்திடு''
என்றே சொன்ன குரங்கிடம்
""இனிய நண்பா! நல்லதை
நன்கே எனக்கு உணர்த்தினாய்
நன்றி'' என்றதாம் கரடியும்!