முத்துக் கதை: உழைப்பே உயர்வு!
ஒரு முறை நபிகள் நாயகத்திடம் இளைஞன் ஒருவன் பிச்சை கேட்டான். அண்ணலார் அவனை ஏறிட்டுப் பார்த்தார். அவனோ நல்ல உடல் கட்டோடு திகழ்ந்தான்.
ஒரு முறை நபிகள் நாயகத்திடம் இளைஞன் ஒருவன் பிச்சை கேட்டான். அண்ணலார் அவனை ஏறிட்டுப் பார்த்தார். அவனோ நல்ல உடல் கட்டோடு திகழ்ந்தான்.
"உன் வீட்டில் ஏதாவது பொருட்கள் இருக்கின்றனவா?'' என்று அவனிடம் நபிகள் கேட்க, தன்னிடம் போர்வை ஒன்றும், பாத்திரம் ஒன்றும் இருப்பதாகக் கூறினான்.
உடனே அவற்றைக் கொண்டு வரச் சொல்லி தனது தோழர்களிடம் ஏலம் விட்டதில் இரண்டு திர்ஹம் நாணயங்கள் கிடைத்தன. நபிகள் அதை இளைஞனிடம் கொடுத்து ஒரு திர்ஹமுக்கு உணவுப்பொருட்கள் வாங்கி சாப்பிடுமாறும் மற்றொரு திர்ஹமுக்கு கோடரி ஒன்று வாங்கி வருமாறும் கூறினார்.,
Advertisement
இளைஞன் வாங்கி வந்த கோடரிக்கு நபியே காம்பு போட்டுக் கொடுத்து,"" பக்கத்து காட்டில் மரங்கள் வெட்டிக் கடைவீதியில் விற்றுப் பிழைத்துக் கொள். பத்து நாட்கள் கழித்து மீண்டும் என்னை வந்து பார்!'' என்றார்.
பத்து நாட்கள் கழிந்தன. இளைஞன் மீண்டும் வந்து வணங்கி ""நாயகமே! தாங்கள் சொன்னவாறு விறகு வெட்டிப் பிழைத்தேன். பத்து நாட்களுக்குள் பத்து திர்ஹம் லாபமாகக் கிடைத்தது! இப்போது மகிழ்ச்சியோடு இருக்கிறேன். பிறரிடம் இரந்துண்டு வாழ வேண்டிய தேவை இனி எனக்கில்லை'' என்று மகிழ்ச்சியோடு சொன்னான்.
அவனை ஆரத் தழுவிய அண்ணலார்,""பிச்சை எடுப்பதை இறைவன் விரும்பவதில்லை. நம் முயற்சிக்குத் தக்க பலனை ஆண்டவன் கொடுக்கிறான். என்பதை உணர்த்திவிட்டாய்'' என்று பாராட்டினார்.
உழைத்து உண்ணும் உணவே உலகில் மிகச் சிறந்த உணவு என்பது நபிகள் நாயகத்தின் அறிவுரையாகும்.