முகப்பு
சிறுவர்மணி

கதைப்பாடல்: இறைவன் கைக்கு வந்தது...

இனிக்கும் வாழைத் தார் ஒன்றை - வரதன்எடுத்துக் கொடுத்தார் பொன்னனிடம்!

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:01 PM
பகிர்:

இனிக்கும் வாழைத் தார் ஒன்றை - வரதன்

எடுத்துக் கொடுத்தார் பொன்னனிடம்!

"பொன்னா, குமரன் மலை சென்று - கோயில்

காப்பவர் கையில் கொடுத்துவிடு!'

அவருக்கு வளம், நலம் தருகின்ற

அன்புக் கடவுள் முருகனுக்கு

அவரது அன்புக் காணிக்கை

அந்த இனிய வாழைத்தார்!

பொன்னன் சென்றான் கோயிலுக்கு

பூங்கொடி அவன்மகள் பின் சென்றாள்!

சின்னஞ் சிறுமி... மலைப்பாதை!

சிறிதே நடந்தாள்.. களைப்பு வர

அமர்ந்தாள் சோர்ந்து படியினிலே!

அதனைக் கண்டான் அவள் தந்தை!

வாழைத் தாரில் இரு பழத்தை

வழங்கி விட்டான் அவள் பசிக்கு!

வாழைத் தாரை இறைவனுக்கு

வணங்கிச் சேர்த்தான் கோயிலிலே!

திரும்பி வந்தான் ஊருக்கு

உறங்கச் சென்றான் களைப்பாலே!

மறுநாள் வரதன் ஆள் அனுப்பி

பொன்னனை இல்லம் வர வைத்தார்!

"என்ன செய்தாய், தார் எங்கே

இறைவன் கையில்' சேரவில்லை!

இரண்டே பழங்கள் வந்ததென

என்னிடம் கனவில் அவர் சொன்னார்!

விற்று விட்டாயா வழியினிலே

வீணாய்ப் போனதே காணிக்கை!'

கேட்டதும் பொன்னன் விழியினிலே

கண்ணீர் திரண்டது.. "ஐயா நான்

எந்தத் தவறும் செய்யவில்லை

என்மகள் பசியை ஆற்றிடவே

இரண்டே பழங்கள் தான் எடுத்தேன்

இதற்கு என்னை மன்னிப்பீர்!'

"இறைவன் சொன்ன இரண்டு பழம்

இதுதான் போலும், பொன்னா நீ

எனது தவற்றை மன்னிப்பாய்!

ஏழையின் துன்பம் போக்குவதே

இறைவனுக்கான காணிக்கை! - அதை

இன்று உன்னால் உணர்ந்துவிட்டேன்!'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.