முத்துக் கதை: வால் இழந்த நரி
காட்டில் விலங்குகளைப் பிடிக்க வைத்திருந்த பொறி ஒன்றில் ஒரு நரியின் வால் மாட்டிக்கொண்டது.
காட்டில் விலங்குகளைப் பிடிக்க வைத்திருந்த பொறி ஒன்றில் ஒரு நரியின் வால் மாட்டிக்கொண்டது. பொறியில் இருந்து விடுபடக் கடுமையாக முயற்சித்தது நரி. கடைசியில் ஒரு வழியாக விடுதலை பெற்றுவிட்டது. ஆனால் பரிதாபம், பொறியில் சிக்கிய அதன் வால் துண்டாகிவிட்டது.
"வால் இல்லாமல் அசிங்கமாகிப் போய்விட்டேனே, எல்லா நரிகளும் என்னைப் பார்த்துக் கிண்டல் செய்யுமே?' என்று தனது பின்புறத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்துப் புலம்பியது நரி.
பிற நரிகளின் கிண்டலில் இருந்து தப்பிப்பது எப்படி என்று தீவிரமாக யோசித்த அந்த நரி, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது.
Advertisement
உடனே அது நரிகளை எல்லாம் அழைத்தது. அவற்றின் முன் கம்பீரமாக அமர்ந்தபடி பேசத் தொடங்கியது.
""சகோதரர்களே... நமக்குத் தேவையில்லாமல் நீளமாக வால் இருக்கிறதே என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? நமக்குத் தேவையில்லாத சுமையாக இருக்கும் வாலை நாம் வெட்டி எறிந்து விடுவோம்!''
அப்போது மற்ற நரிகள், அந்த நரிக்கு வால் இல்லாததைக் கவனித்தன.
அவை சிரிப்போடு கூறின: ""நரிகளுக்கு வால்தான் அழகு என்று நீ முன்பு பேசித் திரிந்ததை மறந்துவிட்டாயா? தற்போது நீ வாலை இழந்துவிட்டதால் இப்படிப் பேசுகிறாய். எல்லோரும் வாலை இழந்துவிட்டால் நம்மை யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள் என்று எண்ணுகிறாயா?''
நீதி: மலிவான உத்திகள் எப்போதும் பயன் தராது.
("சிறுவர் கதை அமுதம்' என்னும் நூலிலிருந்து)