முகப்பு
சிறுவர்மணி

முத்துக் கதை: கண்ணை மறைத்த பயம்!

ஒரு காட்டில் இளைஞன் ஒருவன் நடந்து சென்று கொண்டிருந்தான். அவனுக்குப் பசித்தது. ஒரு மரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். கனிகள் மிக உயரத்தில் இருந்தன.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

ஒரு காட்டில் இளைஞன் ஒருவன் நடந்து சென்று கொண்டிருந்தான். அவனுக்குப் பசித்தது. ஒரு மரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். கனிகள் மிக உயரத்தில் இருந்தன.

அவன் மரத்தின் மீது ஏறி சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் மரக் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்க கிளையின் மீது நகர்ந்து சென்றபோது அவனது பாரம் தாங்காமல் கிளை முறிய ஆரம்பித்தது.

சட்டென்று சுதாரித்துக் கொண்ட அவன், அருகில் இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கனவே பயந்து போயிருந்த அவன், மிகவும் பயந்துபோய் கண்ணை மூடிக்கொண்டு, ""யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்'' என்று அலற ஆரம்பித்தான். அவனது உள்ளங்கை வியர்த்து, கை நழுவி விடும் போல இருந்தது.

தற்செயலாக அந்த வழியே முதியவர் ஒருவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார்!

கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தான் இளைஞன்! அவனுக்குக் கோபம் வந்தது!

""பெரியவரே! எனக்கு உதவி செய்யச் சொன்னால் என்னைக் கல்லால் அடிக்கிறீரே!...,உமக்கு அறிவில்லையா?'' என்று கேட்டான்.

பெரியவர் பதில் ஏதும் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மீது எறிந்தார்.

மேலும் கோபமுற்ற இளைஞன், பெருமுயற்சி எடுத்து, கையை வீசி, அருகிலிருந்த கிளை ஒன்றை பலமாகப் பற்றிக் கொண்டான். மற்றும் பெரியவரைப் பார்த்து, ""பெரியவரே! நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விடமாட்டேன்'' என்று எச்சரித்தான். பெரியவரோ, அதற்கும் பதில் சொல்லாமல், மேலும் ஒரு சிறிய கல்லை எடுத்து அவன் மீது எறிந்தார்!

இளைஞனுக்கு கோபம் அதிகமாகிவிட்டது. அந்தக் கோபத்தில், மேலும் முயற்சி எடுத்து பெரிய கிளை மீது ஏறிவிட்டான்! இப்போது கீழே வருவது அவனுக்கு சுலபமாக இருந்தது! விடுவிடுவென கீழே இறங்கினான். முதியவரை நோக்கி வந்தான்! அவரை நன்றாகத் திட்டத் தொடங்கினான்!

""ஏன் அப்படிச் செய்தீர்?...,உம்மிடம் நான் உதவிதானே கேட்டேன்?'' என்று கத்தினான் இளைஞன்!

பெரியவர் அமைதியாகச் சிரித்துக் கொண்டே, ""தம்பி...,உனக்கு நான் உதவிதான் செய்தேன்!'' என்றார்.

இளைஞனோ திருதிருவென விழித்தான்.

பெரியவரோ அவனை நோக்கி, ""நான் உன்னை முதலில் பார்த்தபோது, நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய்!...,உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் உன் "பயம்' மறைய ஆரம்பித்தது! நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டாய்! யோசிக்க ஆரம்பித்து விட்டாய்! நீ கொண்டிருந்த பயத்தால் உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பது உன் அறிவுக்குப் புலப்படவில்லை! உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது! அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன். பெரியவர் சொல்லி முடிக்க, இளைஞன் உண்மையை உணர்ந்து அவருக்கு நன்றி கூறிச் சென்றான்.

முழு கட்டுரையைப் படிக்க →