கதைப் பாடல்: காட்டிலே சிரிப்பு!
காட்டில் இருந்த விலங்கெல்லாம்ஆடின....பாடின....கொண்டாட்டம்!
காட்டில் இருந்த விலங்கெல்லாம்
ஆடின....பாடின....கொண்டாட்டம்!
சிங்க ராஜா அழைக்கின்றார்
சிரிப்புக் கென்று ஒரு கூட்டம்!
ஆலமரத்தின் அடர் நிழலில்
அமர்ந்தன....நின்றன அவையெல்லாம்!
சிங்கம் சொன்னார் செய்தியினை!
""சிரிப்பு வெடிகள் வெடிப்போர்க்கு...
...சிரிப்புப் பரிசு தந்திடுவேன்...
சிரிக்காது ஒருவர் இருந்தாலும் -சிரிப்பை
சொன்னவர்க்குப் பரிசில்லை-அவர்
உடம்பிலும் கிடைக்கும் இரண்டு அடி!''
குரங்கு குதித்தது மேலிருந்து....
சிரிப்பைச் சொன்னது சேட்டையுடன்!
குலுங்கிக் குலுங்கி விலங்கெல்லாம்
கோமாளி யாகிக் களைத்தனவே!
ஆனால் ஆமை சிரிக்கவில்லை....
அதனால் குரங்குக்கு இரண்டு அடி!
மானும் வந்தது மகிழ்ச்சியுடன்
ஆமையை நினைத்ததும் அச்சம்தான்!
வெடித்தது நல்ல சிரிப்பு வெடி
விலங்குக் கெல்லாம் வயிற்று வலி!
எனினும் ஆமை சிரிக்கவில்லை - அடியால்
எள்ளும் கொள்ளும் மான் முகத்தில்!
ஒட்டைச் சிவிங்கிக்கு அழைப்பு வர
உடனே வந்தது உள்ளத்தில்
ஆமையை நினைத்ததும் சிரிப்பு மறந்தது! - ஆனால்
ஆமை சிரித்தது குலுங்கிக் குலுங்கி!
சிரிப்பே இன்னும் சொல்லாத போது - நீ
சிரித்தது எதற்கு? கேட்டார் சிங்கம்...
""அப்போது குரங்கு சொன்ன சிரிப்பு
இப்போதுதானே புரிந்தது எனக்கு!...''
""ஆகா!...இதனை அடித்துக் கொள்ள
அடுத்த சிரிப்பு இங்கே இல்லை!...''
என்றன எல்லாம்! ஒட்டைச் சிவிங்கி
அடி வாங்காமல் சொன்னது, ""நன்றி!''