முகப்பு
சிறுவர்மணி

விலங்குகளின் வேண்டுகோள்!

ஆனை, கரடி, புலி, மான்கள்அனைத்தும் திரண்டே வந்தன!

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:49 PM
பகிர்:

ஆனை, கரடி, புலி, மான்கள்
அனைத்தும் திரண்டே வந்தன!
பானை வயிறு யானையார் 
படுத்து விட்டார் சாலையில்!

சரக்கு உந்து, பேருந்து
சாலை வந்த சிற்றுந்து
இரண்டுச் சக்கர வாகனங்கள்
எல்லாம் தேங்கி நின்றன!

கோருவதென்ன? புரியாமல் 
குழம்பி நின்றனர் மக்களுமே!
யாரிடம் சொல்வது? என்றேதான் 
யானை கவலைப் பட்டதுவே!

அங்கே வந்த கண்ணனும் 
அருகில் சென்றான் யானையிடம்!
""என்ன வேண்டும் உங்களுக்கு?
என்றே அன்பாய்க் கேட்டானாம்!

குறிப்பால் யானை கூறியதாம்!
கண்ணன் புரிந்து கொண்டானே!
மறியல் நடந்த இடத்திற்கு 
மாவட்ட ஆட்சியர் வந்தாராம்!

விலங்குகள் பக்கம் தான் நின்று 
விளக்கிக் கண்ணன் சொன்னானாம்!
""அழகிய தோற்றம் குறிஞ்சி நிலம்
அடர்ந்த காடு இயற்கை வளம்!....

....பசித்தால் உண்ண புல்தழைகள்...
பழங்கள், கிழங்கு பஞ்சமில்லை!
கிழிந்தே தொங்கிடும் வெண்துகிலாய்
கீழே இறங்கிடும் மலையருவி!

எல்லைக் கோடாய் வனத்தினிலே 
இருந்தன மரங்கள் சுற்றிலுமே!
உள்ளம் மகிழ்ந்தே விலங்குகளும் 
ஓடின பரந்த வெளியினிலே!

எல்லை மீறி மாந்தருமே
இடத்தைப் பிடித்தனர் காட்டினிலே!
கொல்லை,தோப்பு, தொழிற்சாலை,...
குளுகுளு மாளிகை பாருங்கள்!

விலங்குகள் வாழ்ந்த இடத்தினிலே
வீடுகள் இன்று வரிசையிலே!
நிலத்தைப் பறித்திடும் மாந்தர் செயல்
நித்தமும் நடந்தே வருகிறது!

உள்ளக் குமுறலை அமைதிவழி
உரைத்திட வந்தன விலங்குகளும்!
ஐயா! நீதி வழங்கிடணும்
அதுதான் உங்களை வேண்டுவது!''

""காட்டைச் சுற்றி இரும்புவேலி
கடிதில் அமைப்பீர்! எவரேனும் 
காட்டு நிலத்தை அபகரித்தால் 
கடுஞ்சிறை வாசம் அறிவிப்பீர்!.....

என்றே ஆட்சியர் ஆணையிட்டார்!
""ஆகா'' என்றன விலங்குகளும்!
வாட்டம் நீங்கிக் கலைந்தனவே!
வனத்தை நோக்கி நடந்தனவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.