புதிய பார்வை!: ஞானக்கிளி! - 22
ஞானத்துக்கு பிள்ளைகள் வணக்கம் சொன்னார்கள்.
ஞானத்துக்கு பிள்ளைகள் வணக்கம் சொன்னார்கள்.
பாபு எழுந்தான்.
""அக்கா,.....ரெண்டு நாளைக்கு முன் எங்க தெருவிலே ஒரு நிகழ்ச்சி!.....''
""என்ன நடந்தது?....தயங்காமல் சொல்...''
""பார்வதிங்கிற அம்மா சமையல் வேலையிலே இருந்தாங்க....கடைக்குப் போக ஆள் இல்லேன்னு இரண்டாம் வகுப்பு படிக்கிற அவங்க பொண்ணு மஞ்சுளாவை அனுப்பினாங்க...பக்கத்திலேதான் கடை...என்ன பயம்... என்ற எண்ணம்.....நேரம் ஆகியும் அவளைக் காணோம்!.... அந்தக் கடை மூடி இருந்தது....அவ வீட்டுக்குத் திரும்பாம தெரு முனையிலே இருந்த இன்னொரு கடைக்குப் போனா....அப்போ என்ன நடந்தது தெரியுமா?''
எல்லோரும் திகைப்புக்கு உள்ளானார்கள்....ஞானத்தின் முகத்திலும் கவலை தெரிந்தது.
""முன்பின் தெரியாத ஒருத்தன் வந்து மஞ்சுளாவிடம் பேச்சுக் கொடுத்தான். "பொட்டுக்கடலையை நானே வாங்கித் தர்றேன்' னு வாங்கி வந்தான். கொடுத்திட்டு அவள் கழுத்திலே போட்டிருந்த சங்கிலியை கழற்றினான்...மஞ்சுளா அழுது கத்தவே ....அவளைத் தூக்கிக்கிட்டு வேகமா நடந்தான்.....தற்செயலா அந்த வழியாக வந்த போலீஸ்காரர் சந்தேகத்திலே அவனை நிறுத்தி மஞ்சுளாவை மீட்டார்!....அவனைக் காவல் நிலையத்துக்கு அழைச்சிக்கிட்டுப் போனாங்க....இதை எங்க அம்மா சொன்னாங்க....''
ஞானத்தோடு சேர்ந்து எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
ஞானம் கேட்டது...""சிவகாமி,....இது பற்றி உன் கருத்து என்ன?''
""பாபு சொன்னதிலே இரண்டு விஷயத்தை கவனிக்கணும்....தங்கச் சங்கிலியை மஞ்சுளாவுக்குப் போட்டது,....அவ்வளவு சின்னக் குழந்தையை கடைக்கு அனுப்பியது....இரண்டுமே ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிற விஷயங்கள்....பெரிவர்கள் செய்தாலும் அது தவறுதானே?....''
மேரி சொன்னாள்....""நம்மைப் போன்றவங்க படிப்பிலே கவனம் செலுத்தணும்...நகைதான் நமக்கு அழகையும், மதிப்பையும் தரும்கிற கருத்து மாறணும்....அது இப்போ ஆபத்தைத்தான் தருது....மஞ்சுளா போன்ற குழந்தைகள் மட்டுமல்ல....பெரிய பிள்ளைகளும் அவர்களுடைய அறியாமையாலும்,...பக்குவமில்லாத துணிச்சலாலும் பல ஆபத்துக்களில் சிக்கறாங்க....எங்கேயும் எப்போதும் யாரிடமும் நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது!.....எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்குமோ?''
அதைக் கேட்டு ஞானம் வியந்தது!
""எப்படிப்பட்ட பக்குவம் நம் பிள்ளைகளுக்கு இருக்கிறது!....சிவகாமியும், மேரியும் ஒரு வகுப்பே நடத்திட்டாங்க....
உங்களுக்கு எப்படிப்பட்ட நண்பர்கள் பார்த்தீர்களா?...
"விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்' னு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்ற கவிஞர் பாடியிருக்கிறாரே....தங்கமணி ஐயா சொல்வார்....சாலையோ, பயணமோ புதியவர் சந்திப்போ,...புதிய இடமோ எச்சரிக்கையாக இருப்போம்!.....ஆபத்தை நாமே உருவாக்காமலும்....எதிர்பாராமல் வந்தால் விழிப்பாக இருந்து அதிலிருந்து மீளவும்,...விலகவும் கற்போம்!..''
அன்றைய சந்திப்பு அவர்களுக்கு ஒரு புதிய பார்வையை வழங்கியது.
கிளி வரும்....