கதைப் பாடல்!
'அப்பன்' என்னும் ஆட்டுக்குட்டி அறிவும் பொலிவும் உடையது!
நல்ல நண்பர்!
'அப்பன்' என்னும் ஆட்டுக்குட்டி
அறிவும் பொலிவும் உடையது!
"சுப்பன்' என்னும் மான் குட்டியைத்
தோழனாக்கித் தொடர்வது!
அன்னை மானும் ஆடும் கூடி
அவற்றின் நட்பை வளர்த்திடும்
உன்ன தத்தை கடப்பங் காட்டின்
விலங்கனைத்தும் புகழ்ந்தன!
ஆடும், மானும் உறங்கும் தருணம்
பார்த்து ஏய்த்துக் குட்டிகள்
காடு சுற்றிப் பார்க்கக் கருதி
மனம் போல் நடக்கலாயின!
இடையில் பார்த்த நரியின் குட்டி
வெறித்துத் துரத்த முனைந்தது!
தொடை நடுங்கி மானின் குட்டி
துயரம் கொண்டு துவண்டது!
"அலறல் கேட்டால் இறைவன் வருவான்
அபயம் தருவான்'' என்றெண்ணி
பலமாய் "அப்பன்' சத்தம்போட்டு
பதற்றம் தவிர்க்கலானது!
அலறல் கேட்டு குட்டியானை
குப்பன் ஓடி வந்தது!
மலங்க மலங்க விழித்து நரியின்
குட்டி ஓட்டம் பிடித்தது!
தங்கள் உயிரைக் காப்பதற்கு
இறைவன் தூதர் போலவே
அங்கு வந்த குப்ப னுக்கு
இரண்டும் நன்றி கூறின!
"தமக்கு இறைவன் தந்த வலிமை
பிறர்க்கு உதவத்தான் எனும்
அமுத மொழியை தினமும் எனது
அம்மா சொல்லித் தருகிறாள்!...
...அதனை மதித்தே உமக்கு உதவ
அடியேன் இன்று செயல்பட்டேன்!''
பதமாய் சொன்ன குப்பன் தானோர்
வேண்டு கோளை வைத்தது!......
..."நல்ல நண்பர் தேடு கின்றேன்
கிடைக்க வில்லை இது வரை!...
சொல்லற்கினிய உமது நட்பில்
என்னை இணைத்துக் கொள்ளுங்கள்!"
தேடிவந்த ஆடும் மானும்
நடந்த கதையை அறிந்தன!
""கோடி பொன்னை விடவும் மேலாம்
குப்பன் உதவி'' என்றன!
"உயிரைக் காத்த குப்பன் ஆசை
உயர்ந்த ஆசை !....ஆதலால்....
உயிர் இருக்கும் வரையில் நட்பைத்
தொடர்க '' என்று கூறின!
அம்மா, அப்பா தம்மை ஏய்க்கும்
அனைத்துச் செயலும் அவரவர்
தம்மைத் தாமே ஏய்த்துக் கொள்ளும்
தவறாய்ப் போகும் சிறுவர்காள்!