நினைவுச் சுடர்!: நிஜம் சொன்னதற்காக!
கோபால கிருஷ்ண கோகலே பள்ளியில் மாணவனாக இருந்தபோது அவரது ஆசிரியர், வீட்டில் செய்து கொண்டுவரும்படி சில கணக்குகள் கொடுத்தார்.
கோபால கிருஷ்ண கோகலே பள்ளியில் மாணவனாக இருந்தபோது அவரது ஆசிரியர், வீட்டில் செய்து கொண்டுவரும்படி சில கணக்குகள் கொடுத்தார். அவற்றில் ஒரு கணக்கைத் தவிர மற்ற எல்லாக் கணக்குகளையும் கோகலே போட்டார். ஆனால் அந்த ஒரு கணக்கை அவரால் சரியாகச் செய்ய முடியவில்லை. அதற்காக ஒரு நண்பரின் உதவியோடு அந்தக் கணக்கையும் சரியாகச் போட்டார்.
அடுத்த நாள் ஆசிரியர் எல்லாப் பையன்களின் கணக்குகளையம் பார்த்தபோது சிறுவன் கோகலே ஒருவன்தான் எல்லாக் கணக்குகளையும் சரியாகப் போட்டிருக்கிறான் என்று சந்தோஷப்பட்டார். அவனுக்கு ஒரு புத்தகம் பரிசாகக் கொடுக்கப்போவதாகச் சொன்னார்.
ஆனால் இதைக் கேட்டதும் சிறுவன் கோகலே அழ ஆரம்பித்துவிட்டார்.
Advertisement
""ஏன் அழுகிறாய்?'' என்று கேட்டார் ஆசிரியர்.
""எல்லாக் கணக்குகளையும் நானே போடவில்லை....ஒரு கணக்கு மாத்திரம் என் நண்பர் ஒருவர் உதவியால் போட்டேன்....அதனால்தான், தாங்கள் என்னைப் புகழ்ந்தபோது அழுதேன்...''
""இருந்தாலும் இந்தப் பரிசு உனக்குத்தான்''
""நான்தான் ஒரு கணக்குக்கு இன்னொருவர் உதவியை நாடினேனே?''
""இந்தப் பரிசு கணக்கு போட்டதற்காக இல்லை....நீ நிஜம் சொன்னதற்காக!...'' என்று அந்தப் பரிசை கோகலேவுக்குக் கொடுத்தார்.