முத்துக் கதை!: கிளிகள்!
முதியவர் ராம்சாகர் தினமும் ஒரு நதிக்கரையோரம் நடப்பது வழக்கம். நதியின் கரையை ஒட்டியிருக்கும் பாறையில் அவர் தியானத்தில் அமர்வார்.
முதியவர் ராம்சாகர் தினமும் ஒரு நதிக்கரையோரம் நடப்பது வழக்கம். நதியின் கரையை ஒட்டியிருக்கும் பாறையில் அவர் தியானத்தில் அமர்வார். கண்களை மூடி தியானத்தில் இருக்கும் அவரைப் பார்க்க தெய்வீகமாக இருக்கும். சில கிளிகள் அவரது தோளில் வந்து அமரும்! சில அழகிய வண்ணத்துப் பூச்சிகளும் அவரது கைகளில் அமரும்! அவர் அசைவின்றி இருப்பார். அவைகள் தனக்கு மிகவும் பிரியமான, பாதுகாப்பான, இடத்தில் இருக்கிறோம் எனச் சந்தோஷமாய் அமர்ந்திருந்தன. தினமும் இதுபோலவே நடக்கும்! உலகையே பிரேமையால் நேசிக்கும் நிலையில் அவர் அப்போது இருப்பார்! அகத்தில் அன்பெனும் வெள்ளம் பாய்ந்திருக்கும்!
ஒரு முறை பிரேம் சாகர் தன் பேரன் பரத்துடன் நதியின் கரையோரம் சிறிது தூரம் நடந்தார். பேரனை பக்கத்தில் அமரச் சொல்லிவிட்டு பிரேம்சாகர் வழக்கம்போல் தியானத்தில் அமர்ந்தார். கிளிகளும், வண்ணத்துப் பூச்சிகளும் வழக்கம்போல் வந்து அமர்ந்தன.
பேரனுக்கு மிக ஆச்சரியமாக இருந்தது! வியப்புடன் தன் தாத்தாவைப் பார்த்தான். காணக்கிடைக்காத காட்சியாக அது இருந்தது! சிறிது நேரம் சென்றது. தாத்தா கண்விழித்தார்.
தாத்தாவிடம் பரத், ""தாத்தா உங்க மேலே கிளிகள் எல்லாம் வந்து உட்கார்ந்தது!....பட்டாம்பூச்சிகள் கூட உங்க விரல்களில் உட்கார்ந்தது!... ரொம்ப அழகா இருந்தது!...நாளைக்கும் நான் உங்க கூட வர்றேன்....அந்தக் கிளிகளில் ஏதாவது ஒன்றையும், ஒரு பட்டாம்பூச்சியையும் பிடிச்சுத் தர்றீங்களா?'' என்று கேட்டான்.
தாத்தாவுக்கு பேரன் மீது மிகவும் பாசம்! அவர் சிரித்துக் கொண்டே , ""சரி!'' என்று சம்மதித்தார்.
மறுநாள் இருவரும் நதிக்கரைக்கு வந்தனர். தாத்தா வழக்கம்போல தியானத்தில் அமர்ந்தார். வெகு நேரம் கடந்தது. ஆனால் கிளிகள் எதுவும் வரவேயில்லை....அது மட்டும் இல்லை...... பட்டாம் பூச்சிகளும் வரவே இல்லை....
""என்னன்னே தெரியலே... இன்னிக்கு கிளிகள் வரவேயில்லையே!...'' என்றார் தாத்தா ராம்சாகர்.
பரத் சிரித்துக் கொண்டே, ""நீங்க அதுங்களைப் பிடிச்சுடுவீங்கன்னு அதுங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் போலிருக்கு!'' என்றான்.
தாத்தாவுக்கு பரத் ஒரு பெரிய உண்மையைச் சொன்னது போல் இருந்தது. சுயநலத்திற்கு அன்பு அடங்காது என்பதை உணர்ந்து அவரது கண்கள் பனித்தன. கண்களை மூடினார்!
அப்போது ஒரு கிளி பறந்து வந்து அவரது தோளில் அமர்ந்தது!