கதைப் பாடல்: மரங்கள் போட்ட கூட்டம்!
மரங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டம் ஒன்று போட்டன!
மரங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து
கூட்டம் ஒன்று போட்டன!
மாண்புமிக்க சிறுவர்களை
மனம் விரும்பி அழைத்தன!
தங்கங்களே!... உங்களுக்குத்
தாழ்மையுடன் சொல்கிறோம்!
எங்கள் வாழ்வு, வளமையெல்லாம்
இனிமேல் உங்கள் கையில்தான்!
செல்வமுள்ளோர் மேலும் செல்வம்
சேர்ப்பதற்குத் துடிக்கிறார்!
கல்லைப் போன்ற நெஞ்சத்தோடு
காட்டை வெட்டிச் சாய்க்கிறார்!
நாளை நல்ல காற்று வேண்டும்
எங்கிருந்து அது வரும்?
பணத்தை அள்ளிக் கொட்டினாலும்
தண்ணீர் வளம் பெருகுமா?
மரங்கள், பறவை, விலங்கு இன்றி
மனிதர் வாழ முடியுமா?
மனிதர் பலர் பறக்கிறாரே
மண்ணைப் பாலை ஆக்கிட!...
நீங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து
நீர் நிலத்தைப் பேணுங்கள்!
நிம்மதியாய் நீங்கள் வாழக்
காத்திடுங்கள் எங்களை!
கண்ணீர் விட்டு மரங்கள் சொன்ன
கருத்தைச் சிறுவர் கேட்டனர்!
என்றும் இயற்கை காக்கும் அணியில்
நிற்போம் என்றே முழங்கினர்!