மரங்களின் வரங்கள்!: கால்நடைகளுக்கு உணவு வெள்வேல் மரம்
நான் தான் வெள்வேல் மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் அக்கேசியா லூக்கோபுளோயா என்பதாகும். நான் பபேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.
குழந்தைகளே நலமா?
நான் தான் வெள்வேல் மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் அக்கேசியா லூக்கோபுளோயா என்பதாகும். நான் பபேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளை உடைய கரிய முள்ளுள்ள பெருமரமாவேன். என் புறப்பரப்பு வெண்ணிறமாகவும், உட்புறம் மஞ்சளாகவும் இருக்கும். என் மலர்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை, காய்கள் தட்டையானவை. காடுகளிலும், தரிசு நிலங்களிலும் நான் தானாகவே வளருவேன்.
என் இலை, பட்டை, வேர், பிசின், விதை ஆகியவை மருத்துவ குணம் உடையவை. நான் ஒரு காலத்தில் சென்னைக்கு அருகிலுள்ள திருவேற்காட்டில் எங்கும் நிறைந்து காணப்பட்டேன். வேல்காடு தான் மருவி இன்று திருவேற்காடாகி விட்டது. குறிப்பாக, தமிழகத்தில் கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில் மானாவாரி நிலங்களில் நான் செழித்து வளர்ந்திருக்கிறேன்.
Advertisement
நான் வறட்சி மற்றும் பனியைத் தாங்கி வளருவேன். நான் ஒரு முறை பூத்து காய்ப்பேன். என் இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகும். ஆடுகளுக்குத் தழையும், மாடுகளுக்கு நெற்றும் நான் தந்து உதவுகிறேன். என் இலையில் புரதம், நார் சத்து, மாவுப் பொருள், உலோக உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை உள்ளன. என் மரப்பட்டையிலுருந்து எடுக்கப்படும் நார் கயிறு மற்றும் மீன் வலைகள் தயாரிக்கவும் பயன்படுது.
என் மரப்பட்டையில் 21 சதவீதம் டானின் சத்து உள்ளது. நான் நீடித்து உழைக்கக் கூடியவன் என்பதால் என்னை இரயில் தண்டாவளங்கள், கைப்பிடிகள், வேளாண் உபகரணங்கள் தயாரிக்கவும் பெரிதும் பயன்படுகிறேன். என்னை காகிதம் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.
குழந்தைகளே, நீங்கள் உயிர் வாழ காற்று அவசியம். அந்தக் காற்றில் 21 சதவீதம் ஆக்சிஜன் இருக்கு. நாங்கள், நீங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு உங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை தருகிறோம். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 800 கிராம் ஆக்சிஜன் தேவைன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. பல்வேறு காரணங்களைச் சொல்லி மரத்தை வெட்டுகிறார்கள். அதனால காற்றையும் விலை கொடுத்து வாங்க நேரலாம்.
குழந்தைகளே, மரங்கள் சுற்றுப்புறத்திலுள்ள அசுத்த காற்றை கிரகித்து புதிய காற்றை வெளியிடுகின்றன. மண் அரிப்பை தடுத்து நிலத்தை உறுதியாக வைத்திருக்க உதவுது. அது மட்டுமா, பூமியிலிருந்து நீரை சுழற்சி செய்து, காற்றில் ஈரபதத்தை தக்க வைக்கிறது. நீங்க வாழ மட்டுமின்றி பறவைகள், பூச்சிகள், விலங்குகளுக்கு நாங்க அடைக்கலம் தருகிறோம். மழைக்கு முக்கிய காரணங்களே மரங்கள் தான் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். நாங்கள் அழிந்தால் மழை காணாமல் போய் விடும் என்பதையும் அறியுங்கள்.
நான் திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருகோவிலில் தலவிருட்சமாக இருக்கிறேன். மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)