முகப்பு
சிறுவர்மணி

வீரத்தாய்!

சுதந்திரப் போராட்ட காலம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

சுதந்திரப் போராட்ட காலம்.

யக்ஞேஸ்வர சர்மா ஒரு சொம்பில் நீர் எடுத்து காலைக் கழுவிக்கொண்டிருந்தார். வீட்டு வாசலில் சிலர் கூடியிருந்தனர். அவர்களில் சிலர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அவர்களின் முகங்கள் கவலை தோய்ந்திருந்தன. அவர் வாசலுக்கு விரைந்தார்.

""என்ன விஷயம்?... ஏன் உங்கள் முகம் வாடியிருக்கிறது?.... எதுவானாலும் சொல்லுங்கள்!''

"" உங்களது நெருங்கிய நண்பர் திருகூட சுந்தரம் பிள்ளையை சுதந்திரத்திற்கான ஒரு போராட்டத்தின் போது கைது செய்துவிட்டார்கள்!.... அவர் திருச்சி சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்!....'' என்றார் கூட்டத்தில் ஒருவர்.

யக்ஞேஸ்வர சர்மாவிற்கு கவலையாகிவிட்டது. அவர், ""அவரது தாயாருக்கு இந்த விஷயம் தெரியுமா?'' என்று கேட்டார்.

""தெரியாது!.... அவர் கவலைப் படுவாரோ என்று தயக்கமாக இருக்கிறது.... நீங்கள் அவரை விடுவிக்க ஏதாவது செய்ய வேண்டும்!''

""சரி, நான் பார்த்துக்கொள்கிறேன்!....அவரை விடுவிக்க ஏற்பாடு செய்கிறேன்....'' என்று கூறினார்.

சிறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் ஒரு கடிதம் மட்டும் கொடுத்தால் போதும் விடுதலை செய்துவிடலாம் என்று கூறினர்.
திருநெல்வேலி சிந்து பூந்துறைக்கு சுந்தரம் பிள்ளையின் தாயாரைப் பார்க்க விரைந்தார்.
அங்கு சுந்தரத்தின் தாயாரைப் பார்த்தார். அந்தத் தாய் மிகவும் கலங்கிப் போயிருந்தார்.
யக்ஞேஸ்வர சர்மா அந்தத் தாயிடம், ""எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது.... இதைப் பற்றி நீங்கள் பெரிதாகக் கவலைப் படாதீர்கள்!..... ஒரு கடிதம் கொடுத்தால் போதும்!.... அவரை விடுதலை செய்துவிடுவார்கள்!'' என்றார்.
""அப்படியா!.... என்ன கடிதம்?''
""அது ஒன்றுமில்லை!.... "இனிமேல் அரசியலில் கலந்து கொள்ள மாட்டேன்... நடந்த தவற்றுக்கு மன்னிக்கவும்!....'
என்று திருகூட சுந்தரம் எழுதிக் கொடுத்துவிட்டால் போதும்!....அவரை சிறையிலிருந்து மீட்டுவிடலாம்!''
திருகூட சுந்தரம் பிள்ளையின்அன்னை ஆவேசம் அடைந்துவிட்டார்!
""மன்னிப்பு எழுதிக்கொடுத்துவிட்டு கோழையாகத் திரும்பி வருவதற்காகவா என் மகன் சிறைக்குச் சென்றான்?.... என்ன பேச்சு பேசிகிறீர்கள்?... மறந்து அந்த மாதிரியான பைத்தியக்காரத்தனமான யோசனையை என் மகனைச் சந்தித்தால் அவனிடம் சொல்லிவிடாதீர்கள்!..... அவன் இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ள மாட்டான்!'' என்றார் சுந்தரம் பிள்ளையின் அம்மா.
யக்ஞேஸ்வர சர்மா திகைத்து நின்று அந்த வீரத்தாயை வியப்புடன் பார்த்தார்!
- ஆர்.மகாதேவன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.