முகப்பு
சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: ஒளி, ஒலி தடுப்பான் - நெட்டிலிங்க மரம்

நான் தான் நெட்டிலிங்க மரம் பேசுகிறேன். முதலில் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். பலர் என்னை அசோக மரம் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

Updated On : 8 பிப்ரவரி, 2020 at 10:44 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:17 PM

குழந்தைகளே நலமா?

நான் தான் நெட்டிலிங்க மரம் பேசுகிறேன். முதலில் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். பலர் என்னை அசோக மரம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். நான் வேறு, அவர் வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் குழந்தைகளே. எனது அறிவியல் பெயர் பாலியால்தியா லாங்கிபோலியா என்பதாகும். நான்அனோனாசேயே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் சுமார் 50 அடி வரை மெலிந்து கூம்பு வடிவில் வளருவேன். அதாவது, லிங்க வடிவில் நீளமாக நீண்டு இருப்பதால் என்னை நெட்டிலிங்க மரமுன்னு அழைக்கிறாங்க. நான் ரொம்ப அடக்கமானவன். அதனால் நான் கிளைகளைப் பரப்பி வளர மாட்டேன். நான் இலங்கை மற்றும் வங்காளத்தைத் தாயகமாகக் கொண்டவன். என் பூக்களோ, பழங்களோ கவர்ச்சியானவைகளல்ல குழந்தைகளே. நான் ரொம்ப மிருதுவானவன்.

பங்களா வீடுகளின் முகப்புகளிலும், கட்டடங்களின் முன்புறமும், பூங்காக்களின் ஓரங்களிலும் என்னை விரும்பி வளர்க்கிறாங்க. அதிமாக நீர் செழிப்புள்ள இடங்களிலும் நான் இயல்பா வளருவேன். இன்று காற்று மாசுக்கு காரணம் வாகனங்களிலிருந்து வரும் புகை தான் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் குழந்தைகளே. அந்தக் புகை மாசை கட்டுப்படுத்தும் திறன் எங்கிட்ட இருக்கு. நான் தூசி, ஒலி, ஒளி மாசு போன்றவற்றை வடிகட்டி உங்களைக் காக்கும் அரணாக இருக்கிறேன். தூசுகளை சுத்தம் செய்யும் சல்லடை நான்.

Advertisement

என் இலைகள் நீளமாகவும், ஓரங்கள் வளைந்தும், பளபளப்பாகவும் காணப்படும். பொதுவா, பிப்ரவரி மாதத்தில் என் இலைகளின் கோணப்பகுதியில் பூக்கள் உருவாகும். என் பூக்கள் வெளிர்ப்பச்சை நிறத்தில் நட்சத்திர வடிவிலிருக்கும். ஒரு கொத்தில் 8 பூக்கள் இருக்கும். இந்தப் பூக்கள் பின்னாளில் பச்சை நிறக் காய்களாக மாறும். என் காய்கள், பழங்கள் உருளை வடிவிலிருக்கும். என் அன்பான பறவைகள் என் பழங்களை விரும்பி உண்ணுவாங்க.

என் இலைகள் விழாப் பந்தல்களில் பந்தக்கால்களை அழகுபடுத்தப்படுத்த பெருமளவில் பயன்படுது. சிலர் மாலைகள் தொடுக்கவும் என் இலைகளைப் பயன்படுத்தறாங்க. ஏன்னா, என் இலைகள் சீக்கிரம் வாடாது. அவைகள் இரண்டு நாட்கள் வரை பசுமையாக இருக்கும்.

என் மரத்தின் இலை மற்றும் பட்டைபூஞ்சைக் கிருமிகளை அழித்து படையினால் தோன்றும் புண்களைப் போக்கும். என் மரத்தின் இலைகளை மையமாக அரைத்து பூஞ்சை கிருமியால் தோன்றிய அரிப்புள்ள இடங்களில் தடவி வந்தால் படை இருக்கவே இருக்காது. என் இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் வயிற்றுக் கிறுமிகள் நீங்கும். ஆனால், குழந்தைகளே, குறைந்த அளவு மட்டுமே குடிக்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சு என்பதை மறந்துடாதீங்க. என் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அதைக் கொண்டு படையுள்ள இடங்களில் படையால் ஏற்பட்ட கருமை நிறம் குறையும். புற்றுநோயை விரட்டும் தன்மையும், எச்.ஐ.வி. யின் வீரியத்தைக் குறைக்கும் தன்மையும் எங்கிட்ட இருக்குன்னு சமீபத்துல கண்டுபிடிச்சிருக்காங்க. என் இலைச்சாறு சர்க்கரை வியாதிகாரர்களுக்கு அருமருந்து.

என் மரத்தில் உள்பட்டையிலிருந்து வலுவுள்ள நாரும் உரித்தெடுக்கிறாங்க. என் மரத்தின் வைரப்பகுதி வெண்மையாகவோ அல்லது சிறிது மஞ்சள் சாயத்துடனோ இருக்கும். நான் கனமில்லாமல் மிருதுவாக இருப்பதால் மரப் பீப்பாய்கள், முரசுகள், பெட்டிகள், பென்சில், தீக்குச்சிகள் போன்றவை செய்ய நான் பயன்படறேன். கட்டுமானப் பணிகளுக்கும், சட்டங்கள் செய்யவும் என்னை நீங்க பயன்படுத்தலாம். உங்களுக்கு அதிகமாக இருமல் இருக்கா, கவலைப்படாதீங்க, என் இலையை அல்லது பட்டையை கஷாயம் செய்து குடிங்க, இருமல் இருந்த இடம் தெரியாது. என் இலையிலுள்ள வேதிப் பொருள்கள், பாக்டீரியாக்களை உங்கள் உடல்களில் அண்டச் செய்யாது.

என் மரத்த்தின் பட்டையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் குடித்தால் சீதபேதி சட்டுன்னு குணமாயிடும். இப்போயெல்லாம் என் பட்டையிலிருந்து உடம்பு சூட்டினைப் போக்கும் மருந்துகளை தயாரிக்கிறாங்க. உங்கள் வீட்டின் முகப்பிலும், பூங்காக்களிலும் என்னை வளர்த்தீங்கனா நான் என்றும் உங்களுக்கு நன்றியுடையவனாக இருப்பதோடு சிறந்த மாசுத் தடுப்பானகாவும், ஒலியையும். தூசியையும் தடுத்து உங்கள் வீட்டை சுத்தமா வச்சிருக்க நான் உதவுவேன். மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.