15 வயதான சூர்யவன்ஷி மிகவும் பக்குவமாக விளையாடுகிறார்: புவனேஷ்வர் குமார்
15 வயதான வைபவ் சூர்யவன்ஷி மிகவும் பக்குவமாக விளையாடுகிறார் என புவனேஷ்வர் குமார் தெரிவித்தது குறித்து...
”சூர்யவன்ஷியின் வயது வேண்டுமானால் 15 ஆக இருக்கலாம். ஆனால் அவரின் ஆட்டம் மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் உள்ளது” என பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
நடப்பு சாம்பியன்ஸான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வெள்ளிக்கிழமை (ஏப்.10) நடந்த ஐபிஎல் போட்டியில் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்களைக் குவித்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி 26 பந்துகளுக்கு 78 ரன்களைக் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச்செல்ல காரணமாக இருந்தார்.
Advertisement
இதுகுறித்து, போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் பேசிய பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், “இது டி20 ஆட்டம். சூர்யவன்ஷி இளம் வயதுக்காரர். மேலும், அவர் மிகச் சிறப்பாகவும் பக்குவமாகவும் பேட்டிங் செய்கிறார். ஒரு 15 வயது சிறுவனால் இப்படி பேட் செய்ய முடிகிறது. அவருக்கு 25 வயதாக இருந்தாலும் சரி அல்லது 15 வயதாக இருந்தாலும் சரி இதுமாதிரியான அதிரடி ஆட்டம் டி20 போட்டியின் ஒரு பகுதி என்று நான் நினைக்கிறேன்.
எங்களிடம் திட்டம் இருந்தது. நாங்கள் ஒரு கேட்சையும் தவறவிட்டோம். ஆனால், இது கிரிக்கெட்டில் நடப்பதுதான். ஆகையால், நாங்கள் செய்ய நினைத்ததை எங்களால் செய்ய முடியவில்லை. ஆனாலும், நாங்கள் பெரிதாகக் கவலை கொள்ளவில்லை.
இருப்பினும், எங்களால் முடிந்ததை நாங்கள் செய்தோம். வெளியே இருந்து பார்ப்பதைவிட திடலுக்குள்ளிருந்து பார்க்கும் போது ஆட்டம் மெதுவாக இருந்ததாக நான் உணர்கிறேன். மேலும், வைபவ் நல்ல ஷாட்களை அடித்தார். அதனால், வித்தியாசமாக எதுவும் செய்ய முடியாததை நாங்கள் உணர்ந்தோம்” எனத் தெரிவித்தார்.