அங்கிள் ஆன்டெனா
அவ்வளவு பெரிய யானை எப்படி அளவில் சிறிய மனிதனுக்குக் கீழ்ப்படிகிறது?
அவ்வளவு பெரிய யானை எப்படி அளவில் சிறிய மனிதனுக்குக் கீழ்ப்படிகிறது?
பதில்: பெரிய யானையை உடனடியாகப் பழக்கிவிட முடியாது. ஆனால், காட்டிலிருந்து குட்டி யானையைக் கொண்டு வந்து அதற்குப் பலர் உணவளித்துப் பாதுகாப்பார்கள்.
இப்படி ஆறு மாதங்கள் செல்லும். இந்தக் காலக் கட்டத்தில் குட்டி யானை கொஞ்சம் கொஞ்சமாகத் தனது தாயை மறக்க ஆரம்பிக்கும்.
ஆறு மாதங்களில் அதன் குழந்தைத்தன்மை மாறிவிடும். வளர்கிறது அல்லவா? அதன் எதிர்த்துப் போராடும் ஆற்றலையும் அது இழக்க ஆரம்பிக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியாளர்களிடமிருந்து தப்ப முயற்சிப்பதை நிறுத்தும்.
திடீரென்று ஒருநாள் அதுவரை சந்திக்காத புதுமனிதர் ஒருவர் அந்தக் குட்டியின் முன்னால் நிறுத்தப்படுவார்.
அவர் அதை அன்புடன் தொட்டு, கட்டிக்கொள்வார். கட்டிப் போடப்பட்டிருக்கும் அதன் கட்டுகளை அவர் அவிழ்த்துவிடுவார்.
முதன் முதலாக இந்த உலகில் தன்னையும் மதிக்கும் இன்னொரு உயிரை இப்போது அந்தக் குட்டி பார்க்கிறது. அவரை நம்ப ஆரம்பிக்கும். அவர்தான் பாகன் என்று அறியாமலேயே அவரை நேசிக்க ஆரம்பிக்கும்.
ஒரு மாபெரும் விலங்கொன்றின்மீது தனது கட்டுப் பாட்டை ஒரு மனிதன் இப்படித்தான் பெறுகிறான்.