கடைத்தெருவுக்குப் போன கந்தசாமி, ஒரு கடையில் கிளி விற்பதைப் பார்த்தான். ஆதை வாங்க ஆசைப்பட்டான். கடைக்காரனிடம், ""கிளி என்ன விலை?'' என்று கேட்டான்.
""நூறு ரூபாய்!!'' என்றான் கடைக்காரன்.
""ஒரு கிளிக்கு நூறு ரூபாயா?'' என்று கேட்டான் கந்தசாமி.
""அந்தக் கிளியிடமே விசாரித்துப் பார்!'' என்றான் கடைக்காரன்.
கந்தசாமியும் கிளியிடம், ""கிளியே!.... உன் விலை நூறு ரூபாயா?'' என்று கேட்டான்.
""அதில் என்ன சந்தேகம்?'' என்றது கிளி.
அட!.... கிளி இவ்வளவு நன்றாகப் பேசுகிறதே!.... அப்படியானால் நூறு ரூபாய் கொடுக்க வேண்டியதுதான்! .... என்று பணத்தைக் கொடுத்து கிளியை வாங்கிக்கொண்டு போனான் கந்தசாமி.
ஆனால் வீட்டுக்குப் போய் கிளியிடம், ""உன்னை கூண்டில் வளர்க்கப்போறேன்!'' என்றான் கந்தசாமி.
""அதில் என்ன சந்தேகம்?''
""உனக்கு ஒரு பேர் வைக்கவா?''
""அதிலென்ன சந்தேகம்?''
இப்படி எதற்கெடுத்தாலும், "அதிலென்ன சந்தேகம்?' என்ற வார்த்தையைத் தவிர அதற்கு வேறு ஒன்றும் பேசத் தெரியவில்லை! கந்தசாமிக்கு எரிச்சலாகிவிட்டது!
""போயும், போயும் இந்தக் கிளியை நூறு ரூபாய் கொடுத்து வாங்கினேனே!.....
நான் ஒரு முட்டாள்!'' என்று சலிப்புடன் சொன்னான் கந்தசாமி.
உடனே கிளி, ""அதிலென்ன சந்தேகம்?'' என்று சொன்னது.
நீதி: கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதும் பொய்.
( "நித்தம் ஒரு நீதிக்கதை' என்னும் நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.