அருஞ்செயல் செய்திடு!
அன்பும் அடக்கமும் வைத்திடு
அறநெறி போற்றி வாழ்ந்திடு
அகந்தை தூர ஓட்டிடு
அரும்பெருஞ் செயல் செய்திடு!
பெண்டிரைத் தாயென மதித்திடு
பேராசைத் தீது துறந்திடு
பண்புடன் பலரிடம் பழகிடு
பிறர்துயர் கேட்டுத் துடைத்திடு!
நல்லதை என்றும் நினைத்திடு
நினைப்பதை நடத்திக் காட்டிடு
நற்செயல் மட்டுமே செய்திடு
நாவால் நற்சொல் மொழிந்திடு!
Advertisement
உறுதியை மனத்தில் ஏற்றிடு
உண்மையை என்றும் உரைத்திடு
உலகமே உறவென எண்ணிடு
உழைக்காது வரும்பணம் தள்ளிடு!
அகத்தில் தூய்மை பேணிடு
ஆலயம் போல்நீ ஒளிர்ந்திடு
அனைவரும் சமமென பாடிடு
அகிலம் போற்றநீ வாழ்ந்திடு!