குட்டி கரடியும் அணிலும்!
அன்று அதிகாலையிலே கண்விழித்தது குட்டி கரடி. தினமும் இரவு பன்னிரண்டு மணிவரை
அன்று அதிகாலையிலே கண்விழித்தது குட்டி கரடி. தினமும் இரவு பன்னிரண்டு மணிவரை செல்போனில் விளையாடிவிட்டுத் தூங்குவதால், குட்டிக் கரடியால் அதிகாலை எழும் பழக்கம் போய்விட்டது. இந்தப் பழக்கத்தை மாற்ற நினைத்தது அம்மா கரடி. அதனால், இன்று குட்டிக் கரடியை அதிகாலையிலேயே எழுப்பிவிட்டது.
அதிகாலையில் எழுந்த குட்டிக் கரடியும், அம்மா கரடியும் சிறிது தூரம் நடக்கத் தொடங்கின. அதிகாலையில், தாவரங்களின் மீது பனித்துளி வீழ்ந்து தெரிப்பதையும், பறவைகள் பறப்பதையும் ரசித்தது குட்டிக்கரடி.
முதியவர் ஒருவர் சுள்ளிகளை அடுக்கிக் குளிர் காய்ந்து கொண்டிருப்பதைக் கண்ட குட்டிக் கரடி, "காட்டில் இப்படிக் கொளுத்தாதீர்கள். காடு தீப்பற்றிக் கொள்ளும்' என்று எச்சரித்தது.
'மன்னித்துவிடு குட்டிக் கரடியே... என்னிடம் போர்த்திக்கொள்ள போர்வை இல்லை. அதனால்தான் சுள்ளிகளைக் கொளுத்தினேன்' என்றார்.
உடனே குட்டிக் கரடி "உங்களுக்கு எப்படியாவது நான் போர்வையை ஏற்பாடு செய்து தருகிறேன்' என்று கூறிவிட்டு அம்மாவுடன் நடந்தது. வழியில், மரத்தின் மீது இருந்த தன் நண்பன் அணிலைப் பார்த்து நலம் விசாரித்தது. அணில் கடித்த கொய்யாப் பழங்கள் மரத்தில் நிறைய தொங்கின. அதைச் சாப்பிடச் சொன்னது. குட்டிக் கரடியும் கொய்யாப் பழத்தை சாப்பிட்டுவிட்டு, அணிலுக்கு நன்றி கூறி அங்கிருந்து புறப்பட்டது.
சிறிது தூரம் சென்றதும், சில விதைகள் கீழே கிடப்பதைப் பார்த்தது. அம்மா கரடியைப் பார்த்து "இதெல்லாம் என்ன?' என்றது.
"இனி வரும் காலங்களில் நமக்கு மரங்கள் நிறைய தேவை. சுத்தமான காற்று, குடிநீர் மற்றும் மண் அரிப்பைத் தடுக்கும் மரங்கள்தான் இவை. இவற்றை மண்ணில் தோண்டி புதைத்தால் பெரிய மரமாக வளரும். பழங்கள், நிழல்கள் தந்து, பறவைகளுக்கு மட்டுமல்ல மற்ற விளங்குகளுக்கும் நிறைய பயன்தரும்.
உடனே திரும்பிச் சென்று தன் நண்பன் அணிலை அழைத்து வந்தது. இரண்டும் விதைகளைப் பொறுக்கி, பள்ளங்களைத் தோண்டி விதைகளை நட ஆரம்பித்தன.
இப்படிச் செல்போனிலேயே மூழ்கிக் கிடக்காமல், எதிர்காலத்தில் காட்டை உருவாக்கும் குட்டிக் கரடியின் அன்றாடப் பழக்கங்கள் இயற்கை சார்ந்து இயங்கத் தொடங்கியதைக் கண்ட அம்மா கரடி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது.
விதைகள் நட்ட சில நாள்களில் மழை பெய்தது. உடனே குட்டிக் கரடி நட்ட விதைகள் அனைத்தும் துளிர்க்க ஆரம்பித்தன. குட்டிக் கரடியும், அணிலும் அந்தச் செடிகள் வளரும் இடத்தில் ஓடி விளையாடின. அப்போதுதான் குட்டிக் கரடிக்கு முதியவரின் ஞாபகம் வந்தது. அம்மாவிடம் சென்று, "தாத்தாவுக்கு ஒரு போர்வை ஏற்பாடு செய்து தருகிறேன் என்று சொன்னேன். ஒரு போர்வை குடும்மா...'' என்று கேட்டது குட்டிக் கரடி.
"இந்தா'' என்று ஒரு போர்வையை கொடுத்தது அம்மா கரடி. குட்டிக் கரடியும் அணிலும் அதை எடுத்துச் சென்று தாத்தாவிடம் கொடுத்தன. இருவருக்கும் நன்றி கூறிய முதியவர், 'உதவும் குணமும், சமூக உணர்வும்தான் சிறந்த சூழலை உருவாக்கும்' என்று சொல்லி அந்தப் போர்வையைப் போர்த்திக்கொண்டு அவர்களோடு விதைகளை நட ஆரம்பித்தார்.