அசத்தும் அரசுப் பள்ளி மாணவி!
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 1 மாணவி இளம்பிறை (16), இளம் விஞ்ஞானிகளுக்கான விருதுகளைப் பெற்று வருகிறார்.
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 1 மாணவி இளம்பிறை (16), இளம் விஞ்ஞானிகளுக்கான விருதுகளைப் பெற்று வருகிறார்.
இவரது தந்தை முடி திருத்தும் தொழிலாளி மதியழகன் - சத்தியபிரியா. தம்பதியினரின் மகளாகிய இளம்பிறையின் சாதனை பலரையும் வியப்புக்குள்ளாகியுள்ளது.
புதுதில்லி பிரகதி மைதானத்தில் கடந்த ஆண்டில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு இடையேயான புதிய அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சி, போட்டிகளில் 576 பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து இளம்பிறை உள்பட 13 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
இதில், இளம்பிறை தனது அறிவுத்திறனைப் பயன்படுத்தி வடிவமைத்து செயல் விளக்கமளித்த, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் லிப்ட் இயந்திரத்தில், விபத்துகளை தடுக்கும் கருவி, தேர்வுக்குழுவின் கவனத்தைப் பெற்றது. இதற்கு தேசிய அளவிலான "இன்ஸ்பயர் மனாங்' விருதும், மூன்றாம் பரிசும் கிடைத்தது.
பின்னர், புதுதில்லி விஞ்ஞான் பவன் வளாகத்தில் நடைபெற்ற விழாவில், இந்த விருதை மத்திய அமைச்சர் ஜெயேந்திர சிங் வழங்கினார். தமிழகத்திலிருந்து இந்த விருதை பெறும் முதல் மாணவி இளம்பிறை.
இதன்பின்னர், கம்போடியா நாட்டில் நடைபெற்ற "சியன் இந்தியா கிராஸ் ரூட் இனோவேஷன் ஃபோரம் 2022' என்ற அறிவியல் மாநாட்டில், பங்கேற்ற இளம்பிறைக்கு பாராட்டும் பரிசும் கிடைத்தன.
இதையடுத்து, ஜனவரி 20 முதல் 22 வரை புதுதில்லியில் யாழி அறிவியல், பொறியியல் அசோசியேசன் , பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நடத்திய, ஐரிஸ் அறிவியல் ஆய்வு மாநாட்டில் பங்கேற்ற மாணவி இளம்பிறை, தனது புதிய கண்டுபிடிப்புக்காக "அவுட் ஸ்டேண்டிங்' என்ற விருது பெற்றார்.
இதுகுறித்து இளம்பிறை கூறியதாவது:
""அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பதற்காக, மக்களுக்குப் பயனுள்ள வகையில் ஒரு புதிய கருவியைக் கண்டறிந்து காட்சிப்படுத்தினேன். இதற்கு பெற்றோரும், தலைமையாசிரியை ஜெயலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்களும், மாணவிகளும் ஊக்கமளித்தனர். இதற்காக, பல விருதுகளைப் பெற்றேன்'' என்றார்.