வனம் காக்கும் மனம்!
சவால்கள் நிறைந்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படியிருக்கும் சிலரும்கூட ஒரு கட்டத்தில் போராட்டங்கள் அவசியமா என்று யோசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் பிரச்னைகளைக்
சவால்கள் நிறைந்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
அப்படியிருக்கும் சிலரும்கூட ஒரு கட்டத்தில் போராட்டங்கள் அவசியமா என்று யோசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் பிரச்னைகளைக் கண்டு மிரண்டு போகாமல்,தைரியமாக எதிர்கொள்ளத் துவங்கும் போதே பாதி வெற்றி கிடைத்து விடுகிறது.
அதன்பிறகு கொஞ்சம் புத்திசாலித்தனத்தோடு கூடிய திட்டமிடுதல் இவையும் சேர்ந்துவிட்டால் அப்புறம் வெற்றி நிச்சயம் தான்'' என்கிறார் அருணா பாசு சர்க்கார். அருணா தமிழ்நாட்டில் முதன்முதலாக பணி நியமனம் செய்யப்பட்ட பெண் இந்திய வனத்துறை (ஐ.எப்.எஸ்.) அதிகாரி.
""எண்பதுகளின் துவக்கத்தில் பெண்கல்வி குறித்து விழிப்புணர்வு இருந்தாலும்,வனத்துறை மாதிரியான
சிக்கல்கள் நிறைந்த துறையைப் பெண்கள் தேர்வு செய்ய தயக்கம் காட்டிய நேரம். பற்றாகுறைக்கு கடுமையான பயற்சிகள்,அடர்ந்த காட்டில் பல மைல்கள் பயணம் செய்வது, வாகனங்கள் செல்லாத பகுதிகளில் நடப்பது,மலையேறுவது என்று வீரதீரம் நிறைந்த துறையாகவே இன்றைக்குமிருக்கிறது வனத்துறை. சொல்லப்போனால் காவல் துறையைக்காட்டிலும் கடும் சவால்கள் நிறைந்தது வனத்துறை'' என்கிறார் அருணா.
பிறந்து, வளர்ந்தது எல்லாமே அலகாபாத் என்றாலும் பழமையான வங்காளக் குடும்பம் அருணாவுடையது. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு,பிரபலமான அலகாபாத் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி. தாவரவியல் பயின்றபோது ஆய்வுக்காக தென்னிந்தியாவுக்கு வந்தார்.
அப்போதே தமிழக மக்களும் வனங்களும் அருணாவின் மனம் கவர்ந்தவையாகிவிட்டன. அதற்குப்பிறகு பி.எச்.டி. ஆய்வு மாணவியாக மகராஷ்டிரா சென்றபோது. அங்கு அவர் சந்தித்த வனத்துறை அதிகாரியும் அவரது பணியும் அருணாவின் மனத்தைக் கொள்ள ஆரம்பித்தன. அடர்ந்த காட்டில் அவரது பணி மற்றும் தைரியம் எல்லாமே அருணா வனத்துறையைத் தேர்வு செய்ய காரணமானது.
அப்போது தேசிய அளவிலேயே ஓன்று,இரண்டு பெண்களே வனத்துறைக்கு தேர்வானார்கள். அதிலும் தேர்வின்போது 4 மணி நேரத்தில் 16 கி.மீ நடக்க வேண்டும் என்பதெல்லாம் பெண்கள் இத்துறையைக்கண்டு மிரண்டு போகக் காரணம். மேலும் அறிவியல், பொறியியல் துறையினர்கள் மட்டுமே, வனத்துறைக்கு விண்ணப்பிக்க முடியும் என்பாதலும்,இத்துறைக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது.
டேராடூன் பயிற்சியும்கூட அவ்வளவு சுலபமானவை அல்ல. அந்தப் பேட்ச்-ல் மொத்தம் 3பெண்கள். பெண்கள் என்பதற்காக சலுகைகள் கிடையாது. கடினமான பயிற்சிகள் உடல் அளவில் அப்போது அருணா கொஞ்சம் பலவீனமாகயிருந்தாலும் மனவுறுதி எல்லாவற்றையும் சமாளிக்கவும்,ஜெயிக்கவும் கற்றுக்கொடுத்தது. பயிற்சிக்குப் பிறகு அருணா தமிழ் நாட்டுக்குப் பணிக்கு அனுப்பப்பட்டார்.
திருச்சி வந்தவுடன் அருணா முதல் வேலையாக ஓரு நல்ல ஆசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டார். இன்றைக்கும் ஆங்கில கலப்பின்றி தூய தமிழில் பேசவும்,இலக்கணப் பிழையின்றி எழுதவும் செய்கிறார்.
திருச்சியிலிருந்த சமயம் தன்னிடம் வந்த வித்யாசமான புகார் குறித்து அருணா, ""தமயந்தி என்கிற யானையை அதன் உரிமையாளர் பிச்சை எடுக்கச் செய்து வருவதாகத் தொடர்ந்து புகார் வந்தது. விசாரிக்கக் கோரி கீழே உள்ள அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியதில்,அவர்கள் ஓரு வழியாக தமயந்தியைக் கண்டுபிடித்து விட்டார்கள்.
அதன்பிறகு வனத்துறை சட்டத்தின்படி யானையைத் தொலைவிலுள்ள வனச்சரகத்தில் ஓப்படைக்குமாறு சொல்லப்பட்டது. அது சற்று தொலைவிலுள்ள ஊர் என்பதால் யானையை லாரியில் அழைத்துச் செல்ல முயற்சித்தோம். யானையால் முடியவில்லை. எனவே நடத்திச் செல்லுமாறு சொன்னோம். அடுத்த சில தினத்தில் பக்கத்து ஊருக்குக் காரில் போகும்போது,யானை கண்ணிரோடு தெருவில் நடந்து கொண்டிருந்தது. எனக்கு மனசு கேட்கவில்லை.
இறங்கிப்போய் யானைக்கு நிறைய பழங்கள் வாங்கிக் கொடுத்தபோது ஓருவித பாசத்தோடு பார்த்தது. அப்புறம் அதை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தேன்'' என்று சொல்லும் அருணா தமயந்தியின் நலத்தை அடிக்கடி விசாரித்து வைத்துக் கொள்கிறார்.
அருணாவின் கணவர் மனோஜ்குமார் சர்காரும் ஐ.எப்.எஸ். அதிகாரி என்பதால் வீட்டில் மனிதர்களைப்பற்றிய பேச்சுகளைக்காட்டிலும் விலங்குகள் குறித்த விசாரிப்புகளே அதிகம். "ஓருமுறை அவர் குற்றாலத்தில் வேலை செய்யும்போது, மிகப்பெரிய சிறுத்தை ஓன்று மாட்டியது.உடலில் காயங்களுடன் போராடிய அதை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்தும் பயனில்லாமல் அடுத்த நாள் இறந்து போனது. அன்றைக்கு என் கணவரும், என் இரண்டு மகள்களும் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.
சிறுத்தையின் பக்கத்திலிருந்து கவனித்து வந்த என் கணவர் அது இறந்த பிறகு மனிதர்களுக்குச் செய்வதைப் போலவே இறுதிச் சடங்கு செய்தார். அதன் பிறகு பல நாட்கள் வரை அதைக் காப்பாற்ற முடியவில்லையே என்று புலம்பிக்கொண்டிருந்தார். இதைச் சொல்லும்போதே அருணாவின் கண்களில் கண்ணிரீத் துளிகள் எட்டிப் பார்த்தன.
கடத்தலைத் தடுக்கும் விதமாக, வேலையாளைப்போல, லாரியில் பயணம் செய்துவிட்டு,இடையில் லாரியை நிறுத்தி அதிரடியாக சோதனை செய்வதில் அருணா கில்லாடி. வனவிலங்குகள் மற்றும் கடல்வாழ் உயிர்களின் பாதுகாப்பு உள்ளீட்ட பல்வேறு திட்டங்களில் பணியாற்றிய அருணாவிற்கு மலைவாழ் மற்றும் பழங்குடி மக்களிடம் நேசம் இருக்கிறது.
அருணாவின் பெரியப்பாக்கள் இரண்டுபேர் விடுதலைப்போராட்டத்தில் பங்குபெற்றதுடன், இந்திய முன்னேற்றத்திற்காக கடைசிவரை கல்யாணமே செய்து கொள்ளாமல் பாடுபட்டனர் என்பதில் அருணாவிற்கு நிறைய கர்வம். தற்போது மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை (தமிழக அரசு) செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் அருணா,கடல் வளத்தைப் பாதுகாக்கவும்,மீனவர்களுக்கு மாற்றுத்தொழில் கற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
""ஆண்டு முழுதும் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபடுவதால் கடல் பகுதியில் போதிய மீன் கிடைப்பதில்லை. அதனால் உணவுக்குப் பயன்படுத்த முடியாத மீன்குஞ்சுகளும் வலையில் சிக்கிக் கொள்கின்றன. அவற்றை கடற்கரையில் வீணாக வீசி எறிந்துவிட்டுப் போகின்றனர்.
இது சுற்றுச் சூழலை பாதிப்பதோடு, கடல்வளத்தையும் பாதிக்கிறது. அதனால் ஆண்டுக்குச் சில மாதங்கள் படகு தயாரித்தல், வலை தயாரித்தல் போன்ற கடல் சார் பணிகளில் மீனவர்களைப் பயன்படுத்த இந்த மாற்றுத் தொழில் பயன்படுகிறது'' என்றார்.