முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

படிக்க வந்த இடத்தில் நடிப்பு!

"மெட்டிஒலி'  தொடரை இயக்கிய திருமுருகன், தற்போது இயக்கி வரும் தொடர் "நாதஸ்வரம்'. ஒரு அழகான காலை பொழுதில் அத்தொடரின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றோம். அங்கு ஒப்பனை அறையில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்த

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:03 PM
பகிர்:

"மெட்டிஒலி'  தொடரை இயக்கிய திருமுருகன், தற்போது இயக்கி வரும் தொடர் "நாதஸ்வரம்'. ஒரு அழகான காலை பொழுதில் அத்தொடரின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றோம். அங்கு ஒப்பனை அறையில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார், அத்தொடரில் நாயகியாக நடிக்கும் ஸ்ருதிகா. ஒப்பனை செய்தபடியே நம் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

"நாதஸ்வரம்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

திருமுருகன் ஸôரைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. அந்த அளவுக்கு வெற்றிகரமாக ஓடிய தொடர்களை இயக்கியவர். அவருடைய டைரக்ஷனில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தத் தொடரில் என் கேரக்டர் பேரு மலர். என்ஜினீயர் கதாபாத்திரம். ரொம்ப சாஃப்ட்டான நேச்சர் உள்ள பாத்திரம். அதேசமயம் என்னோட ஒர்க்ல ரொம்ப பெர்பக்ட்டா இருக்கிற மாதிரியான கேரக்டர். படப்பிடிப்பில் வேலைப் பளுவே தெரியாமல் ரொம்ப ரிலாக்ஸôக ஒரு குடும்பத்துல இருப்பது போல இருக்கு.  

இதைத் தவிர வேறு தொடர்கள் நடிக்கிறீங்களா?

தற்சமயம்  வேறு எந்த தொடரிலும் நடிக்கவில்லை. பெரியதிரையில் பாலு தம்பி மனசிலே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறேன். நேரம் கிடைக்காததால் நிறைய  தொடர்களில் வாய்ப்பு வந்தும் நடிக்க முடியவில்லை.

"நாதஸ்வரம்' தொடருக்கு உங்களை எப்படி தேர்வு செய்தார்கள்?

"வெண்ணிலா கபடி குழு' படத்தில் நான் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தேன். அதற்கடுத்து "மதுரை டூ தேனி' படத்திலும் நடித்திருக்கிறேன். "வெண்ணிலா கபடி குழு' படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியவர்தான் "நாதஸ்வரம்' தொடருக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர். அவர் மூலமாகத்தான் இந்தத் தொடரில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.  

நீங்கள் பெரியதிரையில் இருந்து சின்னதிரைக்கு வந்தவரா?

நான் பெரியதிரையில் இருந்து வரவில்லை. முதலில் சின்னதிரையில்தான் ஆங்கராக  இருந்தேன். அதைத் தவிர நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்தேன். அதன் பிறகுதான் பெரியதிரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது சின்னதிரை,பெரியதிரை இரண்டிலும் நடிக்கிறேன்.

சினிமாத் துறைக்கு எப்படி வந்தீர்கள்?

என்  அக்கா சுதா, டிவியில்தான் ஆங்க்கராக இருக்கிறார்கள். நான் கல்லூரி விடுமுறையில் இருக்கும் பொழுது அவர் மூலமாக தான் சின்னதிரையில் வாய்ப்பு கிடைத்தது. அப்படி தான் இண்டஸ்ட்ரிக்குள்ளே வந்தேன்.  

பெரியதிரை, சின்னதிரை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?

சினிமாவைப் பொருத்தவரை குறுகிய காலத்தில் முடிந்துவிடும். ஆனால் சின்னதிரையில் தொடரை பொருத்தவரை மெகா பிராஜக்டாக இருக்கிறது.  அதை தவிர வேறு வித்தியாசம் எதுவும் எனக்கு தெரியவில்லை.  

உங்கள் குடும்பம் பற்றி?

எனக்கு சொந்த ஊர் மலேசியா. பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அங்கேதான். பள்ளி படிப்பு முடிந்தவுடன் மேற்கொண்டு படிப்பதற்காக மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்தோம். பி.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது நான், அம்மா, அக்கா மூவரும் சென்னையிலேயே தங்கிவிட்டோம். அப்பா மட்டும் அடிக்கடி மலேசியா சென்று வருகிறார்.  

வெளியிடங்களுக்குச் செல்லும்பொழுது ரசிகர்கள் உங்களை அடையாளம் தெரிந்து  கொள்கிறார்களா?

நிறைய பேர் அடையாளம் தெரிந்து கொண்டு வந்து பேசுகிறார்கள். "நாதஸ்வரம்' தொடரில்  கோபியை எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று ரொம்ப ஆர்வமாகக் கேட்பார்கள்.  இங்கு இருப்பது போலவே மலேசியாவிலும் தமிழ் தொடர்களுக்கு நிறைய வரவேற்பிருக்கிறது. மலேசியர்கள், தமிழ் தொடர்களை விரும்பிப் பார்க்கிறார்கள். என் நண்பர்கள் எல்லாம் நான் நடிக்கும் தொடரைப் பார்த்துவிட்டு எப்படியிருந்தது என்று போன் செய்து சொல்லும்பொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.