முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கடல் முயல்

மன்னார் வளைகுடாவில் வாழும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களில் ஒன்று கடல் முயல். இவை எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன்படுத்தும் டெக்னிக் வியப்பாக இருப்பதாக ராமநாதபுரத்தில் உள்ள மன்னார்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:12 AM
பகிர்:

மன்னார் வளைகுடாவில் வாழும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களில் ஒன்று கடல் முயல். இவை எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன்படுத்தும் டெக்னிக் வியப்பாக இருப்பதாக ராமநாதபுரத்தில் உள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையில் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியாற்றும் டாக்டர் தீபக் சாமுவேல் தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறியது:

""மெல்லுடலிகள் குடும்பத்தைச் சேர்ந்தவையே கடல் முயல். இந்த உயிரினத்தின் உடல் பகுதி முழுவதும் புரதத்தினால் ஆன ஓடு உள்ளது. தாவரங்களை மட்டுமே விரும்பி உண்ணும் இந்த உயிரினத்துக்குத் தலையின் முன்புறத்தில் இரு உணர்வுக் கொம்புகள் உள்ளன.

இது சட்டென பார்ப்பதற்கு முயலைப் போன்று இருப்பதால், இதனை கடல் முயல் என்கிறார்கள்.

Advertisement

இவற்றின் மூலமாகத்தான் தனக்குத் தேவையான உணவு இருக்கும் இடத்தை அறிந்து அதனை உட்கொள்கிறது. பெரும்பாலும் 2 கிலோ எடை வரை பெருத்துக் காணப்படும் இவை, மெல்லுடலிகள் வரிசையில் சிற்றினங்களில் மிகப் பெரியது எனலாம்.

இந்த உயிரினத்தின் இளம் உயிரியானது உடல் முழுவதையும் மண்ணுக்குள் மறைத்துக் கொண்டு உணர்வுக் கொம்புகளை மட்டும் நீருக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும்.

கடல் பாசிகள் உள்ள இடங்களில் அதிகமாகக் காணப்படும். கடல் பாசிகள்தான் இவற்றின் முக்கிய விருப்ப உணவாகும். கடல் பாசிகளின் மீது ஊர்ந்து செல்லும்போது எதிரிகள் தாக்க நினைத்தால், கடல் பாசிகளுக்குள் சென்று மறைந்துவிடும்.

இது மட்டுமில்லாமல், எதிரிகளிடமிருந்து தப்பிக்க இவை மற்றுமொரு தந்திரத்தையும் பயன்படுத்துகின்றன.

கடல் பாசிகளின் நிறத்தைப் போலவே இவை தனது நிறத்தையும் அடிக்கடி மாற்றிக் கொள்வதால், இதன் எதிரிகளால் இவற்றை எளிதில் அடையாளம் காண முடிவதில்லை.

எதிரிகள் தாக்க முற்படும்போது அவற்றிடமிருந்து தப்பித்துக் கொள்ள தனது உடலில் உள்ள மை போன்ற திரவத்தை, காவல் துறையினர் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிக் கலைப்பதைப் போல கக்குகின்றன.

அந்த நேரத்தில் எதிரிகளால் சிறிது நேரம் எதையும் காணமுடியாத நிலை ஏற்படும். அந்த நேரத்தில், அங்கிருந்து உடனே தப்பித்துவிடும். இதன் தோல் விஷத் தன்மையுடையதாக இருப்பதாலும், மற்ற விலங்குகள் இதைச் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுகின்றன.

இவை வெளிக் கொட்டும் மையில் இருந்து உயிர் வேதியியல் ஆராய்ச்சிகளும், மருந்துகள் தயாரிக்கவும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தனது உடலைச் சுருக்கி பின் மீண்டும் விரிவடைந்து கொண்டே செல்வதால், இதனால் குறைந்த தூரம் மட்டுமே நீந்த முடிகிறது.

இறக்கை போன்ற வடிவத்தில் தோலில் காணப்படும் மடிப்புகளின் உதவியுடன் தான் ஊர்ந்து செல்கின்றன.

இவை கடலில் வாழும் கடல் அட்டை உயிரினங்களைப் போலவே கடலின் தரைப் பகுதியைத் தூய்மைப்படுத்தும் உன்னதமான பணியை செய்து கொண்டிருக்கின்றன. இதனால் இவை கடலில் சுற்றுப்புறச் சூழலைப் பேணிக் காப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன'' என்றார்.

-சி.வ.சு. ஜெகஜோதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.