பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
பிரதமர் மோடியின் அரசால் நாட்டின் எரிவாயு உற்பத்தி சரிந்திருப்பதாகவும், உரத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் கார்கே குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசால் நாட்டின் எரிவாயு உற்பத்தி மற்றும் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "மோடி அரசு, தனது தோல்விகளையும் எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் தொகுதி மறுவரையறை மசோதா மூலம் திசைதிருப்ப முயன்றது. இருப்பினும், அவரின் திசைதிருப்பும் நாடகத்தை இந்தியா முறியடித்தது.
நாட்டுக்கு எரிபொருள் மற்றும் உரங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் பாஜக அரசு, இரட்டைத் தோல்வியையே சந்தித்துள்ளது.
Advertisement
நாட்டில் எரிபொருள் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் நம் நாட்டுக் கப்பல்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முடியவில்லை. இந்திய நாட்டின் கொடியை ஏந்திய 54 கப்பல்கள், கடந்த 14 நாள்களாக நீரிணையில் சிக்கித் தவிக்கின்றன.
மோடி அரசால், 2025 - 2026இல் நாட்டின் கச்சா எண்ணெய் தொடர்ந்து 11-ஆவது ஆண்டாகக் குறைந்து வருகிறது. 2014 - 2015 ஆம் ஆண்டிலிருந்து ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி கிட்டத்தட்ட 22 சதவிகிதம் சரிந்துள்ளது.
எரிவாயு உற்பத்தியும் அதிர்ச்சியூட்டும்வகையில், சுமார் 40 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது. 2011 - 2012இல் 47,555 மில்லியன் நிலையான கனமீட்டர் என்ற நிலையிலிருந்த எரிவாயு உற்பத்தி, 2020 - 2021இல் வெறும் 28,672 மில்லியன் நிலையான கனமீட்டர் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது.
தற்போது, புதிய எல்பிஜி இணைப்பையும் மோடி அரசு நிறுத்தி விட்டது. சிலிண்டருக்காக நீண்ட வரிசைகள், கிராமப்புறங்களில் முன்பதிவு செய்ய 45 நாள்கள் காத்திருப்பு, கள்ளச்சந்தை என மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், எல்லாம் சரியாகி விட்டது என மோடி அரசு மறுப்பு தெரிவிக்கிறது.
புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு முன்பிருந்தே, உரத் தட்டுப்பாட்டு பதிவாகியுள்ளது. பாஜகவின் அலட்சியத்தால், இந்திய விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
உர உற்பத்தியை, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 24.6 சதவிகிதத்துக்கு மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. 2026 மார்ச்சில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
சீனாவில் ஏற்கெனவே 2025 ஜூலையில் சிறப்பு உரங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆனால், இறக்குமதிகளை விரிவுபடுத்த மோடி அரசு முன்வரவில்லை. ரஷியாவும் உர ஏற்றுமதியை தற்போது நிறுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.