முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கந்தரப்பம், கருப்பட்டிப் பணியாரம்!

செட்டிநாடு உணவுகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. தினமும் ஒரே மாதிரி உணவுகளைச் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு செட்டிநாடு உணவுகள் மாறுதலாக இருப்பதே முக்கிய காரணமாகும்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:27 AM
பகிர்:

செட்டிநாடு உணவுகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. தினமும் ஒரே மாதிரி உணவுகளைச் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு செட்டிநாடு உணவுகள் மாறுதலாக இருப்பதே முக்கிய காரணமாகும். அந்த வகையில் செட்டிநாட்டுப் பலகாரங்களைத் தயாரித்து விற்பதைத் தொழிலாகக் கொண்டு படுபிசியாக இயங்கி வருகிறார் சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த பார்வதி. இவர்

நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""எனக்கு பூர்வீகம் கரைக்குடி. எங்கள் ஊரின் பாரம்பரிய பலகாரங்களின் செய்முறையை எல்லாம் சின்ன வயதிலேயே கற்றுக்கொண்டேன். திருமணமாகி சென்னைக்கு வந்த பிறகு எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வகை பலகாரங்களை எல்லாம் செய்து கொண்டிருந்தேன்.

திடீரென ஒருநாள் என் கணவர் விபத்தில் சிக்கி தவறிவிட்டார். இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் சொந்த ஊருக்கே திரும்ப நினைத்தேன்.

அப்போது எனது தோழிகள் சிலர் எங்கள் பகுதியில் இருந்த மகளிர் சுய உதவி குழுவில் என்னை வற்புறுத்திச் சேர்த்தார்கள். ""குடும்பத்தை நடத்த ஏதாவது தொழில் தொடங்குங்கள், நாங்கள் துணையாக நிற்கிறோம்'' என்றனர். ""சமைப்பதை தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது'' என்றேன்.

""உனக்குத் தெரிந்த செட்டிநாட்டுப் பலகாரங்களைச் செய்து விற்பனை செய்யேன்'' என்றார்கள். செய்துதான் பார்ப்போமே என்று நினைத்து,மாலை நேரத்தில் வீட்டு வாசலிலேயே சிறிய அளவில் பணியாரம், கந்தரப்பம், கருப்பட்டிப் பணியாரம் செய்து கூடவே கொஞ்சமாக மல்லிப்பூ இட்லியும் செய்து வைத்தேன். கொஞ்ச நாட்களில் எங்கள் வீட்டு இட்லி எங்கள் ஏரியா பூராவும் பிரபலமாகி விட்டது. தினமும் இட்லிக்காகவே வந்து நிறையபேர் வாங்கிச் சென்றனர். அதன் பிறகு கற்கண்டு வடை, சீப்புச் சீடை, தேன்குழல், இடியாப்பம் என மற்ற பலகாரங்களையும் செய்ய ஆரம்பித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் எங்கள் சுய உதவிக் குழுவில் இருந்த பெண்கள் அவர்களது இல்லத்தில் நடைபெறும் சிறிய விசேஷங்களுக்குச் செட்டிநாட்டு ஸ்பெஷல் உணவுகளைச் செய்து தரும்படியும் ஆர்டர் கொடுத்தார்கள். அவர்கள் வீடுகளுக்கு வந்த விருந்தினர்கள் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறதே என்று அடுத்தடுத்து ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு பிள்ளைகளுடைய படிப்பு, குடும்பம் நடத்த என ஓரளவுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் ஊருக்குப் போகிற எண்ணத்தை விட்டுவிட்டு முழுநேரமும் இந்தத் தொழிலேயே ஈடுபட்டு வருகிறேன்.

தற்போது கேன்டீன், சிறு ஓட்டல்களின் ஆர்டர்கள் எடுத்து செய்து தருகிறேன். இதையடுத்து விருப்பமுள்ளவர்களுக்குச் செட்டிநாட்டுப் பலகாரங்களைச் செய்ய பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறேன். மேலும் இந்தத் தொழிலைத் தொடங்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஆலோசனையும் வழங்கி வருகிறேன்.

500 ரூபாய் முதலீடு இருந்தால் போதும். வீட்டில் உள்ள பாத்திரங்களைக் கொண்டே இந்தத் தொழிலைத் தொடங்கிவிடலாம். ஆர்டர் பிடிக்க, ஆரம்பத்தில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு சாம்பிள் கொடுத்துப் பார்க்கலாம். என்னென்ன அயிட்டம், என்னென்ன ஸ்பெஷல் என்று நோட்டீஸ் அடித்து விநியோகிக்கலாம்.

இன்று எல்லா ஓட்டல்களிலும் செட்டிநாட்டு உணவுகளுக்கு என்று தனிப் பிரிவே இருக்கிறது. இதனால் ஓட்டல்களிலும் வேலைக்கு போகலாம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.