வெறும் சினிமா இசையமைப்பாளர் என்று இளையராஜாவை விலக்கி வைத்து விட முடியாது. சங்கீதத்தின் பல நுணுக்கங்களைக் கற்று தேர்ந்தவர் அவர். அதற்கும் மேலாக எதை, எங்கே பயன்படுத்த வேண்டும் என்ற ஞானமும் இளையராஜாவிற்கு உண்டு.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சங்கீத வித்வான் எஸ்.வி. பார்த்தசாரதி 'தத்மறிய தரமா? மூலாதார கணபதே' என்ற கீர்த்தனையை இசைத்தட்டில் பாடியிருந்தார். இந்த கீர்த்தனை ரீதிகெளளை ராகத்தில் அமைந்ததாகும். இந்த ரீதிகெளளை ராகம் பெரும்பாலும் சினிமாவில் யாரும் பயன்படுத்தியதில்லை. ஆனால், முதன் முறையாக ரீதிகெளளை ராகத்தை சினிமா பாட்டிற்கு பயன்படுத்தி அழகு சேர்த்தவர் இளையராஜாதான்.
பாலமுரளிகிருஷ்ணா பாடிய 'சின்ன கண்ணன் அழைக்கிறான்' என்ற பாட்டுதான் அது. எதைச் செய்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்தி கொண்டு ஆர்வத்தோடும் அக்கறையோடும் செய்வார் இளையராஜா.' இப்படி பாராட்டியவர் கவிஞர் வாலி.
பெண் குரலில் இளையராஜா
பாவலர் வரதராஜன் கச்சேரிகளில் பெண் குரலில் ஒருவர் பாடி வந்தார். அவருடைய குரல் மென்மையாகவும் இருக்கும். நாளடைவில் அந்த குரல் கரகரப்பாக மாறியது. மிகவும் பயந்து விட்டார் பெண் குரலில் பாடி வந்தவர்.
இனி அவ்வளவுதான், கச்சேரிகளில் சான்ஸ் கிடைக்காது என்று பயந்தார். பயந்தது போலவே நடந்து விட்டது. அந்த இடத்தில் பெண் குரலில், வேறொரு ஆண் இடம்பிடித்து விட்டார். சோர்ந்து விடவில்லை அவர். அவருக்கு ஆர்மோனியம் வாசிக்க தெரிந்ததால் பிழைத்து கொண்டார். முதலில் பெண் குரலில் பாடி வந்தவர் இளையராஜா, அந்த இடத்தை பிடித்து கொண்டவர் அமர்சிங் (அது தாங்க கங்கை அமரன்). அண்ணன் இடத்தை தம்பி பிடித்ததால், நமக்கொரு இசைஞானி கிடைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.