சினிமா தான் எங்கள் வாழ்க்கை: ரிஷிகபூர்
தன்னுடைய 68- ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமான ராஜ்கபூரின் இரண்டாவது மகனான ரிஷிகபூர், மூன்று வயதிலேயே ராஜ்கபூர் இயக்கி தயாரித்த "ஸ்ரீ420' படத்தில் அறிமுகமானார்.
தன்னுடைய 68-ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமான ராஜ்கபூரின் இரண்டாவது மகனான ரிஷிகபூர், மூன்று வயதிலேயே ராஜ்கபூர் இயக்கி தயாரித்த "ஸ்ரீ420' படத்தில் அறிமுகமானார். பின்னர் பள்ளி மாணவனாக "மேரா நாம் ஜோக்கர்' படத்தில் சிறுவயது ராஜ்கபூராக நடித்த போது, அந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது பெற்றார்.
"மேரா நாம் ஜோக்கர்' படத்தின் தோல்வியால் பாதிக்கப்பட்டிருந்த ராஜ்கபூர், ரிஷிகபூர், டிம்பிள் கபாடியாவை வைத்து தயாரித்த "பாபி' 1973-இல் வெற்றிப் பெற்றத்தை தொடர்ந்து , ராஜ்கபூர் மீண்டும் தன்னைப் பாலிவுட்டில் நிலை நிறுத்திக் கொண்டார்.
ரிஷிகபூரின் வருகையால் காதல் மன்னனாக வலம் வந்த ராஜேஷ்கண்ணாவுக்குப் பட வாய்ப்புகள் குறைந்தன. தொடர்ந்து ரிஷிகபூர் 45 ஆண்டுகளில் 150 படங்களில் நடித்து முடித்தார். ரஜினியுடன் "தோஸ் தி துஷ்மன்' படத்திலும், கமலஹாசனுடன் "சாகர்' படத்திலும் நடித்த ரிஷிகபூர், அண்ணன்-தம்பி கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் தம்பி பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க படம் "அமர் அக்பர் அந்தோணி' இவ்வகையில் அமிதாப்பச்சனுடன் மட்டும் 20 படங்களில் சேர்ந்து நடித்துள்ளார்.
Advertisement
2019-ஆம் ஆண்டு இவர் நடித்து வெளியான "தி பாடி' என்ற படத்திற்குப் பின் ரத்த புற்றுநோய் காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பியவுடன், மீண்டு ஜூஹி சாவ்லாவுடன் சேர்ந்து நடித்துள்ள "சல்மாஜி நம்கின்' என்ற படம் ஏறக்குறைய முடிவடையும் நிலையில் உள்ளது. இதுவே இவரது கடைசிப் படமாகும்.
"குல்லம் குல்லா' என்ற தலைப்பில் தன்னுடைய சுயசரிதையை எழுதியுள்ள ரிஷிகபூர், 2017-ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இலக்கிய விழாவில் கலந்து கொண்டபோது, ""நான் என்னுடைய சுயசரிதையில் எழுதியதற்கு காரணமிருக்கிறது. நடிகர்களின் குழந்தைகளைப் பற்றி மக்கள் மத்தியில் சில தவறான எண்ணங்கள் இருப்பதைத் தவிர்க்கவே இப்புத்தகத்தை எழுதினேன். பிரபல நடிகரின் மகனாக இருந்தாலும் "பாபி' வெற்றிக்கு 25 ஆண்டுகளுக்குப் பின் என் திரையுலக வாழ்க்கையில் ஏற்பட்ட இடைவெளியை தக்க வைக்க நான் மிகவும் போராட வேண்டியிருந்தது. உலகிலேயே நான்கு தலைமுறைகளாக சினிமாவையே தொழிலாகக் கொண்ட முதல் குடும்பம் எங்களுடையதாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன். நாங்கள் சுவாசிப்பது, சாப்பிடுவது , உறங்குவது எல்லாமே இந்த சினிமா மூலம் தான்"" என்று கூறினார். இப்போது இவரது மகன் ரன்பீர் கபூரும்நடிகராக உள்ளார்.