பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.
தொகுதி மறுவரையறைக் குழு பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எம்.பி. குற்றச்சாட்டு
தொகுதி மறுவரையறைக் குழு பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவையில் தொகுதி மறுவரையறை குறித்த விவாதத்தின்போது கரூர் எம்.பி. ஜோதிமணி பேசுகையில், "மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையானது, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்திவரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பாதிக்கும். சிறந்த ஆட்சி வழங்கப்படும்போதிலும், இத்தகைய அணுகுமுறையால் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கை, நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் குரலைப் பலவீனப்படுத்தி, கூட்டுறவு கூட்டாட்சி முறையின் உணர்வைக் குலைக்கக் கூடும்.
Advertisement
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள், ஒருதலைபட்சமாகவோ அரசியல் உள்நோக்கத்துடனோ எடுக்கப்படக்கூடாது. மேலும், நடவடிக்கைகளுக்கு முன்னதாக மாநிலங்களுடன் விரிவான கலந்தாலோசனைகள் நடத்தப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் என்பது, வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல; அது நீதி, பங்களிப்பு, சமநிலையைப் பற்றியது.
பாகுபாடு காட்டப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தமிழகம் மற்றும் பாதிக்கப்பட்ட பிற மாநில மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளும் கிளம்பும்.
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரின்கீழ் தொகுதி மறுவரையறைக் குழு அமைக்கப்படுவது நியாயமற்றது" என்று தெரிவித்தார்.