நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்! ஷ்ரேயாஸை பாராட்டிய சச்சின்!
ஷ்ரேயாஸ் பிடித்த கேட்ச்சை ‘நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்’ என சச்சின் பாராட்டியது குறித்து...
மும்பை வான்கடேவில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பிடித்த கேட்ச்சை ‘நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்’ என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இந்தப் போட்டியில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 18 ஆவது ஓவரில் மார்கோ யான்சென் வீசிய பந்தை ஹார்திக் பாண்டியா அடிக்க, எல்லைக் கோட்டில் நின்றிருந்த ஷ்ரேயாஸ் லாவகமாக தாவிப் பிடித்து, எல்லைக் கோட்டைத் தாண்டும்போது அருகில் நின்றிருந்த சேவியர் பார்ட்லெட்டிடம் வீச, அவரும் அதனைத் தவறவிடாமல் பிடித்துவிடுவார்.
Advertisement
இந்த சீசனின் சிறந்த கேட்ச்சாக இது அமையும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து சச்சின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஷ்ரேயாஸ் பிடித்த இந்த கேட்ச் சிறப்பாக அமைந்ததற்கு அவருடைய உடல்திறன் மட்டும் காரணமல்ல; அதன்பின் இருந்த விழிப்புணர்வுதான். பந்தின் வேகம், பந்து வரும் உயரம் மற்றும் எல்லைக்கோடு எங்கு உள்ளது, அதன்மீது கால் வைப்பதற்கு எவ்வளவு தூரம் உள்ளது என்பதையெல்லாம் கணித்ததன்பிறகு பந்தைப் பிடிக்க சரியாகப் பாய்ந்திருக்க வேண்டும்.
பந்தைப் பிடிக்கப் பாயும் அதேவேளையில், கால் தரையில் படுவதற்குமுன் காற்றிலேயே அருகில் நின்றிருந்த சேவியர் பார்ட்லெட் எங்கு இருக்கிறார் என்பதையும் பார்த்து அவரிடம் வீச வேண்டும்.
ஒரு நொடிப்பொழுதில் இவை அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் அபாரமான விழிப்புணர்வு, சரியான நேரம், உடற்தகுதி மற்றும் நிதானம் இவை எல்லாவற்றையும் மிகச்சரியாகச் செய்தார். நான் நேரில் பார்த்ததிலேயே இது மிகச் சிறந்த கேட்சுகளில் ஒன்று” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.