குடும்பச் சூழலே காரணம்
இணையதளத்துக்கு அடிமையாவதற்குக் குடும்பச்சூழலும் காரணம் என்கிறார் சென்னை ராமகிருஷ்ணாமிஷன் விவேகானந்தா கல்லூரியின் சமூகப் பணி பேராசிரியரும்,
இணையதளத்துக்கு அடிமையாவதற்குக் குடும்பச்சூழலும் காரணம் என்கிறார் சென்னை ராமகிருஷ்ணாமிஷன் விவேகானந்தா கல்லூரியின் சமூகப் பணி பேராசிரியரும்,
"நியமிதா' மன நல ஆலோசனை மைய இயக்குநருமான வீ.வெங்கடேஷ்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
""இன்றைக்கு இணையதளத்துக்கு அடிமையாக மாறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கூட, கைப்பேசியையும், இணையதளத்தையும் பயன்படுத்தும் அளவுக்கு அடிப்படை அறிவு வந்துள்ளது. எனினும், அளவோடு இருந்தால் எதுவும் நல்லது. அளவோடு இணையதளத்தைப் பயன்படுத்தினால், நல்லதுதான். தேவைக்குப் பயன்படுத்திவிட்டு, உடனடியாக வெளியேற வேண்டும். அதிலேயே மூழ்கிவிடுவது என்பது தவறானது.
அருகே நண்பர்களோ, உறவினர்களோ இருக்கும்போது இணையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க, அவர்களோடு நேரத்தைச் செலவிட வேண்டும். அனைவரும் இணையத்தில் மூழ்கிவிடும் போக்கை தவிர்க்க வேண்டும்.
சிறிய வயதில் குழந்தைகளுக்கு வீடியோ கேம் விளையாட கொடுக்கும் வழக்கமே படிப்படியாக கைப்பேசிக்கும், இணையதளத்துக்கும் அடிமையாக்கிவிடுகிறது.
இதனால் குழந்தைகளை பழைய வாழ்க்கை முறைக்கு வாழ்ந்தாக வேண்டிய நிலை உருவாக வேண்டும். சிறுவர்கள், சிறுமியர்களை பக்கத்துக்கு வீட்டு சிறார்களோடு விளையாடும் முறையைக் கொண்டு வர வேண்டும். இதற்கு ஒருவரோ, ஒரு குடும்பமோ முயற்சித்தால் போதாது. ஒட்டுமொத்தமாக சமூகமே மாற வேண்டிய சூழல் இருக்கிறது.
பிரபல மனநல மருத்துவமனைகளில் இணையதளத்துக்கு அடிமையானோருக்கு தனியாக மையம் செயல்பட்டுவருகிறது என்பதை நினைக்கும்போது, மனதுக்கு வருத்தம் அளிக்கக் கூடியதாகும்.
மது, போதைப்பொருள் போன்றவற்றுக்கு அடிமையாவதற்குக் காரணமே குடும்பச் சூழல்தான். இதேபோல், இணையதளத்தில் மூழ்கிவிடுவதற்கும் குடும்பச் சூழல்தான் பெரும்பாலும் காரணமாக அமைகிறது. தனிமையைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் சமூக வலைதளத்தில் என்ன செய்துள்ளார்களோ என்று சில மணி நேரம் செலவழித்து, அதையே பின்பற்றுவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
இணையதளத்தை மூழ்குவதைத் தவிர்க்க, புத்தகங்களைப் படித்தல், நூலகங்கள் செல்லுதல், பூங்காக்களுக்குச் சென்று இயற்கையை ரசித்தல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களையும் நாடலாம்'' என்றார் வீ.வெங்கடேஷ்.