படையாண்ட மாவீரா
இயக்குநர் வ. கௌதமன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'படையாண்ட மாவீரா'.
இயக்குநர் வ. கௌதமன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'படையாண்ட மாவீரா'. காடுவெட்டி குருவின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜிதா, 'பாகுபலி' பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. இதில் வ. கௌதமன் பேசும் போது... ''இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது போலவே மற்றொருபுறம் எனது திரைத்துறையையும் நான் நேசிக்கிறேன்.
இது நான் இயக்கி நடித்திருக்கிற படைப்பு. உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்பு தான் பேச வேண்டுமே தவிர அவன் பேசக்கூடாது என நான் நினைப்பேன். ஆனாலும் இந்த படத்தை பற்றி நான் பேசவேண்டியுள்ளது. எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்னைகளுக்காகவும் நான் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள், காடுவெட்டி குரு பற்றியும் ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டியபோது அதற்கு எதிராக நான் நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள்.
Advertisement
அந்த சவாலை ஏற்று தான் இந்த படமே தொடங்கியது. இது தனி சாதி படமல்ல, தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள். என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகள் பற்றிய படங்கள் எடுப்பது தான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, அதை நிறைவேற்றி விட்டேன்.
இரண்டாவது காடுவெட்டி குருவும் தோழர் தமிழரசனும் வாழ்ந்த முந்திரிக்காடு, இதில் ஒருவரை பற்றி தற்போது படம் எடுத்துள்ளேன். மூன்றாவது என்னுடைய தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வன்னிக்காடு. லட்சிபப் பாதையில் உள்ள இரண்டு படங்களை முடித்துள்ளது போல் இன்னும் இருக்கும் இரண்டு படங்களையும் கட்டாயம் எடுப்பேன்.'' என்றார்.