விஜய்யை அரசியல்வாதியாக பார்க்கவில்லை: கி.வீரமணி
அரிச்சுவடியே அறியாத விஜய்யை அரசியல்வாதியாக பார்க்கவில்லை, நடிகராக தான் பார்க்கிறோம் என்று கி.வீரமணி கூறியது குறித்து...
அரிச்சுவடியே அறியாத விஜய்யை அரசியல்வாதியாக பார்க்கவில்லை, நடிகராக தான் பார்க்கிறோம் என்று திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
தஞ்சையில் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி 77-ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்க பேரணியை சனிக்கிழமை கி.வீரமணி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு திமுக தடை போடுகிறதா என்ற கேள்விக்கு, விஜய் அரசியல் அரிச்சுவடே தெரியாமல் பேசுகிறார். அரசியலைப் புரிந்தவர்களுக்கும் அரசியல் அரிச்சுவடியை தாண்டி எம்.ஏ படித்தவர்களுக்குதான் நான் பதில் சொல்லி பழக்கம். ஆனால் அரிச்சுவடியே அறியாத ஒருவருக்கும் நான் பதில் சொல்வதில் பயனில்லை. நான் அவரை அரசியல்வாதியாக பார்க்கவில்லை. நடிகராக தான் பார்க்கிறோம் என்றார்.
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து மே 4- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு 5-ஆம் தேதிக்கு மேல் கோட்டைக்கு மீண்டும் செல்வது முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். இது ஆருடம் அல்ல, ஜோசியம் அல்ல. மக்கள் மன்றத்தில் எழுதப்பட்ட தீர்க்கமான முடிவு.
முதல் தேர்தலில் இருந்து இன்றைய தேர்தல் வரை பார்த்துக் கொண்டிருக்கிற வாய்ப்பை பெற்றவன் நான். அதனால் ஒவ்வொரு தேர்தலும் எப்படி நடந்திருக்கிறது. மக்கள் எவ்வாறெல்லாம் முடிவு செய்வார்கள் என்பது தெரியும். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுவிட்டது. அதில் நடந்து செல்வது மட்டும்தான் இன்னும் பாக்கியுள்ளது. உறுதியாக திமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி எங்களது கூட்டணி தான் மெகா கூட்டணி. நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம் என கூறி வருகிறார் என்ற கேள்விக்கு, ஏற்கனவே 10 முறை எடப்பாடி பழனிசாமி இதையேதான் சொன்னார். தற்போது 11-ஆவது முறையாக கூறி வருகிறார்.
வாழ்க்கையில் அழுவதும், சிரிப்பதும், சிரித்துக் கொண்டே அழுவதும் இயல்பு . அதையொட்டியே மதிமுகவினர் கூட்டணி பங்கீடு, சின்னம் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். வேற எந்தவொரு காரணமும் கிடையாது என வீரமணி கூறினார்.