முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வரலாறு காட்டும் காலணி!

மனிதர்கள் காலில் அணிய காலணி மிகவும் அவசியமானது, பாதுகாப்பானது.

Updated On : 19 மே, 2025 at 1:29 PM
பகிர்:

மனிதர்கள் காலில் அணிய காலணி மிகவும் அவசியமானது, பாதுகாப்பானது. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து மனிதன் காலணி அணியும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இன்று இருப்பது போல் அல்லாமல் மிருகங்களின் தோலை காலில் சுற்றி நடந்து கொண்டிருப்பார்கள் என கருத முடிகிறது.

அமெரிக்கா, எகிப்து போன்ற வெளிநாடுகளிலும் தொன்மையான காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில், ஆரிகான் மாநிலத்தில் கோட்டை மலை குகை என்ற இடத்தில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அணியப்பட்ட காலணிகளை கண்டுபிடித்துள்ளனர்.

கிரேக்க மொழியில் ' சாண்டலான்' என்று காலணி குறிப்பிடப்படுகிறது. எகிப்திய பிரமிடுகளிலும் வண்ண ஓவியம் பூசப்பட்ட காலணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ரோமானிய வீரர்களும் காலணிகளை அணிந்து இருந்தனர் என்பதை வரலாற்றுச் சான்றுகளால் அறிய முடிகிறது.

அடி புதை ஆரணம்:

தமிழ்நாட்டில் சங்க இலக்கியங்களில் மக்கள் அணிந்திருந்த காலணி பற்றிய குறிப்பு காணப்படுகிறது. பெரும்பாணாற்றுப்படை 'அடி புதை ஆரணம்' எனக் குறிப்பிடுகிறது.

அகநானூற்றுப் பாடலில் வீரர்கள் அணிந்திருந்த காலணியை அடி புதை தொடு தோல் மறைய வேகி (101 - 5 -9) என்றும், வணிகர்கள் அணிந்திருந்ததை ' தோல் புதை சீரற்றிடிக் கோலுடை உமணர்' என்று குறிப்பிடுவதை காணலாம். மேலும் காலணி, செருப்பு, பாதுகை, பாதரட்சை, குறடு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

ராமர் பாதுகை:

ராமர் கானகம் செல்லும்பொழுது, ராமருடைய பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து பரதன் ஆட்சி செய்தார் என்பதை புராண வரலாறுகளில் அறிகிறோம்.

கோயில்களில் காணப்படும் தெய்வ வடிவங்களிலும் காலணி அணிந்திருப்பதைக் காணலாம். பிட்சாடனர் வடிவத்தில் உயரமான காலணியை சிவன், அணிந்து செல்வது போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

நாயன்மார்களில் கண்ணப்ப நாயனார் காலில் தோலாலான அழகிய காலணியை அணிந்து இருப்பதை காண முடிகிறது. அதேபோன்று, குழுலூதி ஈசனருள் பெற்ற ஆனாய் நாயனாரும் காலணி அணிந்திருந்ததாக பெரிய புராணம் கூறுகிறது. சமய சான்றோர்களும் காலணிகளை அணிந்து இருப்பதை இன்றும் காணலாம்.

ஸ்ரீரங்கம் கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் ஸ்ரீ அரங்கநாத பெருமாளுக்கு ஆண்டுதோறும் காலணி சமர்பிக்கும் சம்பிரதாயப் பழக்கம் இருந்து வருகிறது. அக்கோயிலில் கொட்டாரம் என அழைக்கப்படும் நெற்களஞ்சியங்கள் இருக்கும் இடத்தில் இவை தொங்க விட்டு இருப்பதை இன்றும் காணலாம்.

- கி. ஸ்ரீதரன்,

(தொல்லியல் துறை ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.