தொழிலோடு தொண்டு..!
வாழ்க்கையில் முன்னேற கடுமையான உழைப்பும், இடைவிடாத முயற்சியும் தன்னம்பிக்கையும் வேண்டும்.
வாழ்க்கையில் முன்னேற கடுமையான உழைப்பும், இடைவிடாத முயற்சியும் தன்னம்பிக்கையும் வேண்டும். இவ்வாறு வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வோர் தங்களது லட்சியத்தை அடைந்து முன்னேறி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். இவர்களைப் போன்றவர்தான் தொழிலதிபர் கே.பி. சண்முகம்.
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடியை அடுத்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி உடையார்-சரோஜினி தம்பதியின் மகன் சண்முகம். இவர் படித்து வாங்கிய பட்டத்தைவிட, சமூகத்தைப் படித்து அறிவு பெற்றது அதிகம். தந்தை வழியில் விவசாயம் செய்து வந்த இவருக்குத் தொழிலைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இவர் தனது நண்பர்களுடன் இணைந்து சிறிய நிதியகத்தைத் தொடங்கினார். பின்னர், சர்க்கார் நாட்டாமங்கலம், பேளூரில் பெட்ரோல் விற்பனை நிலையங்களைத் தொடங்கினார். பேளூரில் ஜெயமுருகன் திருமண மண்டபத்தையும் கட்டினார். விவசாயியாக வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய இவர், தனது லட்சியத்தை அடைந்து தொழிலதிபராகி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறார்.
Advertisement
Advertisement
பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் அறங்காவலராக ஆன்மிகப் பணியையும், புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை சிதம்பர உடையார் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவராகவும் விவசாயப் பணியையும் மேற்கொண்டார்.
வாழப்பாடி இலக்கியப் பேரவையின் புரவலராக இலக்கியப் பணியிலும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்விப் பணியையும் மேற்கொண்டுவருகிறார்.இதற்காக இவர் 'சேவைச் செம்மல்' உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.