முகப்பு
தமிழ்மணி

வீரக்கலைஞர் விசுவநாததாஸ்

தேசப்பற்று உள்ளவர்களாக நடித்துக்கொண்டு தம்மை வளர்த்துக் கொண்டவர்களுக்கு மத்தியில், நடித்துக்கொண்டே தேசப்பற்று உள்ளவர்களாக மக்களை வளர்த்து, தம்மைத் தேய்த்துக் கொண்டவர் தியாகி விசுவநாததாஸ். ஏறினால் நாடக

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தேசப்பற்று உள்ளவர்களாக நடித்துக்கொண்டு தம்மை வளர்த்துக் கொண்டவர்களுக்கு மத்தியில், நடித்துக்கொண்டே தேசப்பற்று உள்ளவர்களாக மக்களை வளர்த்து, தம்மைத் தேய்த்துக் கொண்டவர் தியாகி விசுவநாததாஸ்.

ஏறினால் நாடகமேடை; இறங்கினால் ஆங்கிலேயச் சிறை என்ற நிலையில், அடிமை இருள் அகற்ற சுதந்திரச் சுடராய்ச் சுழன்று இசை ஒளிவீசிய இயக்கம் அவர்.

1886-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி, சிவகாசி சுப்பிரமணியம் - ஞானம்மாள் தம்பதிக்கு இரண்டாவது மகவாகப் பிறந்தார். இளம் பருவத்திலேயே நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த விசுவநாததாஸ், மழலைக் குரல் உள்ளவரை பெண் வேடம் தரித்தார். வாலிபரான பின் புராண நாடகங்களின் தலைமைக் கதாபாத்திரங்களை ஏற்று, மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

Advertisement

1911-இல் தூத்துக்குடிக்கு வருகை தந்த காந்தியடிகள், விசுவநாததாஸின் ஆற்றலைக் கண்டு மகிழ்ந்தார். நாட்டு விடுதலைக்கு அதைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அன்றிலிருந்து பட்டாடைகளை விடுத்து கதராடைகளை உடுத்துவதையே வழக்கமாகக் கொண்ட தாஸ், நாடகங்களில் விடுதலைக்குரிய பாடல்கள் பலவற்றைப் பாடினார்.

இதனால், ஆத்திரமடைந்த ஆங்கில அரசின் காவல்துறை இவரைக் கைதுசெய்ய விரைந்து, வாரண்டை நீட்டியது. முருகவேடத்தில் நின்ற விசுவநாததாஸ் ""யாருக்கு வாரண்டு?'' என்றார். ""ஆட்சியாளர்களை எதிர்த்துப் பாடிய விசுவநாததாஸýக்கு'' என்றார் கைது செய்யவந்தவர். ""அப்படியா, நான் விசுவநாததாஸ் இல்லை. முருகக்கடவுள். அவரைக் கைது செய்ய வாரண்ட் இருந்தால் கொண்டு வாருங்கள். அல்லது வேடம் களைந்து விசுவநாததாஸ் வரும் வரையில் நாடகம் பாருங்கள்'' என்று கூறிவிட்டார். வேறுவழியின்றி விடியவிடிய நாடகம் பார்த்துவிட்டு முடிந்த பிறகு அவரைக் கைது செய்தவந்த அதிகாரியிடம், ""நான் எப்போது அப்படிப் பாடினேன்?'' என்றார் தாஸ். ""முருகன் வேடத்தில்'' என்றார் அதிகாரி. அடடா, ""நாடகத்தில் பாடியது முருகப் பெருமான், விசுவநாததாஸ் இல்லையே. அவர் பாடியதற்கு என்னை ஏன் கைது செய்கிறீர்கள். சட்டம் தெரியாமல் ஆட்சி செய்வதுதான் உங்கள் நீதியா?'' என்று சாடினார். பலனில்லை. வேலூர்ச்சிறை ஓராண்டு காலம் அவருக்கு வீடானது. வெளிவந்த தாஸýக்கு மீண்டும் மேடை; கூடும் கூட்டம்; பாடும் பாடல்கள் முடிந்ததும் சிறை அல்லது அபராதம். தொகையைச் செலுத்தி நண்பர்கள் மீட்டபின்னும் இதே நிலைதான். ஒருமுறை இவருக்காக வழக்காட, வ.உ.சி.யும் வந்ததாகக் கூறுவர்.

1932 நாடுமுழுவதும் விடுதலை எழுச்சி வேகம் கொண்டிருந்த நேரம். தாஸின் நாடகங்களைக் காணவேண்டும் என்று கட்டுக்கடங்காமல் மக்கள் கூடிய காலம். எப்படியும் மேடை ஏறுமுன் அவரைக் கைது செய்துவிட வேண்டும் என்று காவலர்கள் மேடையின் முன்பு காத்திருந்தனர். தாûஸக் காணவில்லை. ஆர்மோனியத்தோடு அவர் சகோதரர் சண்முகதாஸ் மேடையில் ஏறினார். "விசுவநாததாஸ் எப்படியும் வந்துவிடுவார். அவர் வரவு தாமதம் ஆவதால், அவருடைய மகன் சுப்பிரமணியதாஸ் நடிப்பார். அனைவரும் இருந்து ஆதரவு தாருங்கள்' என்று அறிவிக்கப்பட்டது. தாஸின் ஒப்பனைப் பொருள்கள் உள்ள பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஒரு கூலிக்காரன் காவலர்களைக் கடந்து மேடைக்குப் போனான். நாடகம் அரங்கேறியது. முருகன் வேடமிட்டு தாஸின் மகன் பாடியவிதம் அனைவரையும் கவர்ந்தது. தந்தையைப் போலவே மகனும் இருப்பதாகப் பேசிக் கொண்டனர். "கொக்குப் பறக்குதடி' என்று பாடத் தொடங்கியதுதான் தாமதம். மக்கள் ஆவேசமுற்று கரவொலி எழுப்பினர். உன்னிப்பாகக் கவனித்துக் கேட்ட காவல் துறையினருக்குக் கூலிக்காரன்போலப் பெட்டி தூக்கிக்கொண்டு வந்தது "தாஸ்'தான் என்பது புரிந்துவிட்டது. கைது செய்ய விரைந்தனர். கூட்டமாய்ச் சூழ்ந்துகொண்ட மக்கள் விடாது தடுத்தனர் என்பது வரலாறு.

அவருடைய மூத்தமகன் சுப்பிரமணியதாஸýம், தங்கை மகன் சின்னச்சாமியும் இவரைப் போலவே பாடல்கள் பாடி நடித்தனர். முடித்ததும் சிறைத்தண்டனை பெற்றனர். இப்படிக் குடும்பம் முழுவதும் தேசத்திற்காகப் பாடுபட்டது நெகிழ்ந்து நினைக்கத்தக்க வரலாறு.

சிறைவாசம், குடும்ப வறுமை, கடன் சுமை என அடுக்கடுக்காக இன்னல்கள். கடனுக்காக வீடு ஏலம். எட்டயபுர மன்னர் உதவ முன்வந்ததையும் தன்மானமிக்க தாஸ் தவிர்த்தார். அக்காலத்துச் சென்னை மேயராக இருந்த வாசுதேவநாயர் நிலைமை புரிந்து உதவ முன்வந்தார். காங்கிரஸ் இயக்கத்தைவிட்டு வெளியேறுங்கள். இழந்த சொத்துக்களை மீட்டுத்தருவதோடு மாதாமாதம் தொகையும் தருகிறோம் என்றதை தாஸ் மறுத்தார்.

1940 டிசம்பர் இறுதி நாள்கள். வீடு ஏலம் போகுமுன் மீட்பதற்காகச் சென்னைக்கு வந்தார். 5 நாடகங்கள் ஏற்பாடாகியிருந்தன. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம். அதற்கான நிதிதிரட்ட, ஆங்கிலேயருக்காக நாடகம் நடத்திக் கொடுக்க முன்வந்தால், கடன்களை அடைப்பதோடு, மாதம் 1000 ரூபாய் உதவித்தொகையும் தருகிறோம் என்று அப்போதைய சென்னை கவர்னர் எர்ஸ்கின்துரை, தாஸýக்குத் தகவல் தந்தார். சில காங்கிரஸ் தலைவர்கள்கூட இதை ஆதரித்துப் பேசிப்பார்த்தனர். ஆனால் தாஸ் மறுத்து விட்டார். உடல்நலக் குறைவானதால் ஒப்புக்கொண்ட முதல் 3 நாடகங்களில் நடிக்க முடியவில்லை.

31.12.1940 இரவு வள்ளி திருமணம் நாடகம். நலக்குறைவோடு முருகவேடம் ஏற்று மேடையேறினார் தாஸ். புரட்சிமிக்க பாடலைக் கேட்க மக்கள் பெருங்கூட்டம். வழக்கம்போல கைதுசெய்ய, காவலர்தம் காத்திருப்பு. கழுகாசலக் காட்சி. மயில்மீது அமர்ந்து முருகனாகப் பாடுகிறார் தாஸ். ""மாயா பிரபஞ்சத்திலே...'' சற்றே கம்மிப் பின்னர் கணீரென்று ஒலிக்கிறது அவரது மணிக்குரல். வேலேந்தியபடி பாடிய முருகனின் தலை சற்றே தளர்வெய்தித் தொய்கிறது. ஆர்மோனியம் இசைத்துக்கொண்டிருந்த சகோதரன் ஓடி வந்துத்தாங்குகிறார். பார்வையாளர்களில் இருந்த ஒரு மருத்துவர் அரங்கேறிவந்து பரிசோதித்தபோது அவர் மூச்சு நின்றிருந்தது.

மக்களின் கண்ணீர் மலர்களைக் காணிக்கையாக ஏற்று, மயில் வாகனம் மீதமர்ந்த முருகப்பெருமானாகவே விசுவநாததாஸின் இறுதி யாத்திரை. நடந்தது நாடகம் அல்ல; முடிந்தது அவரின் வாழ்க்கையும் அல்ல. என்றும் நிறைந்து, இன்னும் நம் மனக்கண்களில் நிகழ்வதும் தொடர்வதும் அவரது வரலாறு. தியாகம் நிறைந்த வரலாற்றுக்குத் தொடக்கம் உண்டு, முடிவுதான் ஏது..?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments