தமிழ்ச் செல்வங்கள்: சொல் - 1
'சொல்' என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. "நெல்' என்பது ஒரு பொருள். சொல் "நெல்' என்னும் பொருள் தருதலைப் புலமையாளரும் கண்டனர்; பொதுமக்களும் கண்டனர்.
'சொல்' என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. "நெல்' என்பது ஒரு பொருள். சொல் "நெல்' என்னும் பொருள் தருதலைப் புலமையாளரும் கண்டனர்; பொதுமக்களும் கண்டனர்.
நெற்பயிர் கதிர் வாங்குவதற்குக் கருக்கொள்கிறது. அக் கருக்கொண்ட நிலை "சூல்' என்பதாம். நெற்பயிர் சூல் கொண்ட நிலையில், பசும்பாம்பு போல் தோன்றுகிறதாம். உற்றுப் பாருங்கள் உண்மையில் வியப்பு தோன்றும்! என்ன அருமையான உவமை எனப் பாராட்டத் தோன்றும். சூல் முதிர்ந்து கதிர் வெளிப்பட்டுத் தலை நிமிர்ந்து நிற்கிறது! அப்படி நிற்பது பண்பில்லாச் செல்வர் செருக்குப் போல் உள்ளதாம். பின்னர் பால் பிடிக்கிறது நெல்லில்; பால் முதிர்ந்து மணி பிடிக்கிறது. படிப்படியே தலை சாய்கிறது; மணி நன்றாக முற்றிய நிலையில் முழுவதாக வளைகிறது. அது, கல்வியும் பண்பும் நிறைந்த மாந்தரைப் போல் திகழ்கிறது! இவ்வாறு கூறும் நூல் சிந்தாமணி!
மணி முற்றிய கதிருக்கு எதிரேயும், மணி முற்றிய ஒரு கதிர்! காற்று அடித்தலால் இரண்டு கதிர்களும் இணைந்து எழுகின்றன. அக்காட்சி மெய்யடியார் ஒருவரை ஒருவர் கண்டு தலைதாழ்ந்து வணங்குவது போல் உள்ளதாகக் காட்டும் பெரியபுராணமாம் திருத்தொண்டர் புராணம்!
Advertisement
நெல் என்று எதனைச் சொல்வோம்?
பால், மணியாகாமல் கருத்துப் போதல், கருக்காய்! அரை மணியாகி நின்று விட்டது, அரைக்காய்! மணியே இல்லாதது - பொய்யாக நெல்போல் தோன்றுவது, பொய்க்கு (பொக்கு), பதர். பதடி என்பதும் அது.
"பயனில்லாச் சொல்லைச் சொல்பவனைப் பாராட்டுபவனை பயனுள்ள மகன் என்று சொல்லாதே! மக்கள் வகையிலே பிறந்த
பதர் என்று சொல்வாயாக' என்பதைத் திருவள்ளுவர்,
""பயனில் சொல் பாராட்டு வானை மகளெனல்
மக்கட் பதடி எனல்'' என்றார்.
மணி உள்ளதே நெல் என்பது போல், பயனுள்ள சொல்லைச் சொல்பவனே மகன் என்றும், பயனற்ற சொல்லைச் சொல்பவனும் அதைப் பாராட்டுபவனையும் மகனாகத் தோற்றம் தந்தாலும் அவன் மகனாகான்! மக்களில் பதராவன் என்றார். "மகன்' என்றது மகளுக்கும்தான் என்பது இலக்கணம்.
ஒரு நாள் ஒருவருக்குப் பயன் இல்லாமல் வீணாகக் கழிந்தது. அதனை அவர் "பதடி வைகல்' என்றார். அவர்க்குரிய பெயர் காணப்படாமையால், அவர் பாடிய பாடலில் கண்ட "பதடி வைகல்' என்பது "பதடி வைகலார்' என்று பெயரிட்டு வழங்கினர். சங்கச் சான்றோர் அவர்.
மணியுள்ளதே நெல் எனப்படுவது போல், பொருள் உள்ளதே "சொல்' எனத் தமிழர் இலக்கணம் கண்டனர். பொருளில்லாத - காரணம் இல்லாத எந்தச் சொல்லையும் அவர்கள் சொல்லவில்லை. ஆதலால், ""எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே'' என்றார் தொல்காப்பியர்.
தொடர்வோம்...