வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!
வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த, இளம் வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!
கேரளத்தில் இளம் வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடவிருக்கிறதாம். அதன் ஒருபகுதியாக, வாக்குச்சாவடிகளில் அல்வா வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ளதொரு பேட்டியில் கேரள தலைமை தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்தன் யூ. கேல்கர் தெரிவித்திருப்பதாவது :
“கேரளத்தில் 18 முதல் 30 வயது வரையிலான இளம் வாக்காளர்கள் ஏறத்தாழ 50 லட்சம் பேர் இருக்கின்றனர். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் தேர்தல் மீது ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பினும், ஒரு ஓட்டு பெரிதாக மாற்றத்தை விளைக்கப் போவதில்லை என்ற உணர்வுடன் இருக்கும் அவர்கள் வாக்கு செலுத்த பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.
Advertisement
இந்நிலையில், இளையோரிடம் அவர்களுக்கான உரிமைகள் பற்றியும் ஒவ்வொரு ஓட்டும் எவ்வளவு முக்கியம் என்பதையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல வழிகளை முன்னெடுத்துள்ளது.
நாங்கள் இளையோரை ஊக்கப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். அவற்றுள், முதல்முறை வாக்காளர்களுக்கு அல்வா வழங்குதலும் இடம்பெறப் போகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று (ஏப். 9) முதல்முறை வாக்காளர்களுக்கு அல்வா வழங்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த முன்னெடுப்பின் உள்ளர்த்தம் யாதெனில், அவர்களின் அரசியல் பயணத்தை இனிப்புடன் தொடங்கச் செய்வதே. இதனால், ஜனநாயகத்துக்குள் முதல் அடியெடுத்து வைப்பதைக் குறித்து அவர்கள் மகிழ்ச்சியாக உணருவார்கள்” என்றார்.
இதனையடுத்து, 200 சிறப்பு பிராண்ட் அல்வா பாக்கெட்டுகள் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் (டி.இ.ஓ.) அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு நாளில், தன்னார்வலர்கள் உதவியுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்..ஓ.) முதல்முறை வாக்காளர்களைக் கண்டறிந்து அல்வா வழங்குவதை உறுதிசெய்வர்.
அது மட்டுமா! எர்ணாகுளத்திலும் திருவனந்தபுரத்திலும் ‘ஊபர்’ வாகனப் போக்குவரத்து சேவை நிறுவனம் வாக்காளர்களின் இருப்பிடத்திலிருந்து 2 கி.மீ. தொலைவு வரையிலான வாக்குச்சாவடிகளுக்கு இலவச பயண வசதியையும் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் வரும் ஏப். 9-ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.